ராஜஸ்தான் சட்டசபை...இடம் மாற்றம்...சச்சினின் துணிச்சல் வீரர் பேச்சு!!.
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டசபையில் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட்டின் இருக்கை இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதைக் குறிப்பிட்ட சச்சின் பேசுகையில், ''துணிச்சலான வீரர்கள்தான் எல்லையில் போரிடுவதற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். ஆதலால்தான் எனது இருக்கையும் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டுக்கும் இடையே நிலவிய அரசியல் மோதல் முடிவுக்கு வந்து இன்று சட்டசபை கூடியது. தனது ஆதரவாளர்களுடன் இன்று காலை அவைக்கு சச்சின் வந்தார். துணை முதல்வராக இருந்ததால், அவருக்கு முதல்வரின் இருக்கை அருகே இடம் ஒதுக்கப்பட்டு இருக்கும். ஆனால், தற்போது அவர் துணை முதல்வராக இல்லை.
இன்று காலை சட்டசபையில் சட்ட அமைச்சர் நம்பிக்கை வாக்கெடுப்புக்கான தீர்மானத்தை கொண்டு வந்தார். இதை ஆதரித்து, சச்சின் பேசினார். ஆப்போது, ''இன்று காலை 10.45 மணிக்கு அவைக்குள் வந்தேன். அப்போது என்னுடைய இடம் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. முன்பு முதல் வரிசையில் பாதுகாப்பாக, அரசின் ஒரு அங்கமாக அமர்ந்து இருந்தேன். ஆனால், ஏன் தற்போது சபாநாயகரும், கொறடாவும் என்னுடைய இருக்கையை மாற்றினார்கள் என்று சில நிமிடங்கள் யோசித்தேன்.
ராஜஸ்தான் சட்டசபை...நம்பிக்கை வாக்கெடுப்பு...அசோக் கெலாட்...காங்கிரஸ் ஆட்சி தப்பியது!!
பின்னர்தான் எனக்கு தோன்றியது, ஓ... இது எதிர்க்கட்சிக்கும், ஆளும் கட்சிக்கும் எல்லையாக இருக்கும் பகுதி என்று. யாரை எல்லைக்கு அனுப்புவார்கள். துணிச்சலான வீரர்களைத்தான் எல்லைக்கு அனுப்புவார்கள். எங்களது கவலைகளுடன் சிகிச்சைக்காக மருத்துவரிடம் நாங்கள் சென்றோம். சிகிச்சை கிடைத்த பின்னர் நாங்கள் அனைவரும் இங்கு ஒன்றாக கூடி இருக்கிறோம். இங்கு என்ன போர் நடந்தாலும், அதை எதிர்த்து போரிட தயாராக இருக்கிறேன்'' என்றார்.
இன்று கூடிய சட்டசபையில் காங்கிரஸ் கட்சி நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இதில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 200 உறுப்பினர்களைக் கொண்ட ராஜஸ்தான் சட்டசபையில், ஆட்சி அமைக்க 101 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ஆனால், காங்கிரஸ் கட்சிக்கு 101 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இவர்களுடன் சேர்த்து பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 6 பேரும், கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் 5 பேரும், சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் 10 பேரும் காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மொத்தம் தற்போது காங்கிரஸ் கட்சிக்கு 122 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது.
இந்த தீர்மானத்தை எதிர்த்து காங்கிரஸ் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என்று பாஜக அறிவித்துள்ளது. அப்படி கொண்டு வந்து தோற்கடிக்கப்பட்டால் மீண்டும் ஆறு மாதங்களுக்கு அசோக் கெலாட் அரசுக்கு பாஜக அப்படி ஒரு தீர்மானத்தை கொண்டு வர முடியாது.