ஜெய்ப்பூரில் பின்னடைவு.. கடுமையான முடிவு எடுத்த சச்சின் பைலட்.. 2வது ரவுண்டுக்கு தயார்?
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் துணை முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதால், கோபம் அடைந்த சச்சின் பைலட், கட்சிக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டுடன் அடுத்த கட்ட நகர்வுக்கு தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட் இன்று காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் அடுத்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தனது கட்சியின் அழைப்பை நிராகரித்தார். அதன்பிறகு அவருக்கு நெருக்கமானவர்கள் மூலம் பலமுறை நடந்த பேச்சுவார்த்தையிலும் சச்சின் பைட் இறங்கிவரவில்லை. இதற்கிடையே முதல்வர் அசோக் கெலாட்டை மாற்ற மறுத்த காங்கிரஸ் மேலிடம் அவருக்கு முழுமையான ஆதரவு வழங்கி இருப்பதால், கடுப்பான சச்சின் பைலட் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டை நீக்க வேண்டும் என கிளர்ச்சியை நடத்தி வரும் சச்சின் பைலட்டை சமாதானப்படுத்த நடந்த அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்ததால், அவர் துணை முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.
கட்சிக்குள் ராஜேஷ் பைலட் சாதித்தார்... மகன் சச்சின் வெளியேற்றம்.... விழிக்குமா காங்கிரஸ்?
18 பேர் பங்கேற்கவில்லை
முன்னதாக இன்றைய கூட்டத்தில் பங்கேற்குமாறு காங்கிரஸ் மூத்த தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா விடுத்த இரண்டாவது அழைப்பையும் நிராகரித்ததுடன் தனது நிலைப்பாட்டையும் அறிவித்தார். சுர்ஜேவாலா நேற்று மாலை அளித்த பேட்டியின்போது "கட்சியில் சில வேறுபாடுகள் இருந்தால், அவர்கள் அதை திறந்த மனதுடன் சொல்ல வேண்டும். சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து தீர்வைக் காணத் தயாராக இருக்கிறார்கள் " என்றார். ஆனால் சச்சினோ இன்று நடந்த கூட்டத்தை புறக்கணித்தார். அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அத்துடன் சச்சின் பைலட் , முதல்வர் அசோக் கெலாட்டுடன் இணைந்து செயல்பட முடியாது என்று தற்போது தெளிவுபடுத்தியும் விட்டார். இதனால் சச்சின் பாஜக முகாமுக்கு தாவுவாரா என்ற பரபரப்பு எழுந்துள்ளளது.
ஆட்சி கவிழும்
தற்போதைய நிலையில் 200 உறுப்பினர்களைக் கொண்ட ராஜஸ்தான் சட்டமன்றத்தில் 125 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சி செய்து வருகிறது. சச்சின் பைலட்டுக்கு தற்போது 30 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள். ஒருவேளை 30 பேரும் ராஜினாமா செய்தால் ஆட்சி கவிழும் அபாயம் ஏற்படும்.
சச்சின் முகாம் சொல்வதென்ன
எனினும் கூட்டணி எம்எல்ஏக்கள். சுயேட்சைகள் ஆதரவுடன் ஆட்சியை தக்க வைக்க கெலாட் போராடி வருகிறார். இந்நிலையில் , சச்சின் பைலட்டின் முகாமில் உள்ளவர்கள் கூறும் போது , முதல்வர் அசோக் கெஹ்லோட்டின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் தான் ஆதரவு இருப்பது போல் காட்டப்படுகிறது. ஆனால் சட்டசபையிலோ அல்லது ஆளுநருக்கு முன்பாக எண்ணிக்கை நடத்தப்பட்டால், கெலாட்டுக்கு எதிராக இருக்கும் என்றார்கள்.
பாஜகவில் இணைவாரா
பைலட் முகாமில் உள்ளவர்கள் மேலும் கூறுகையில், முதல்வர் கெலாட் ஆதரவை திரட்டும் முயற்சி தோற்றுவிட்டது. ஏனெனில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி எம்எல்ஏக்களின் ஆதரவு அவருக்கு இருந்திருந்தால், இந்நேரம் ஆதரவு பட்டியலை வெளியிட்டிருப்பார்கள். எனவே ஆதரவு இல்லை என்பது தெளிவாகிறது என்றார்கள். இந்நிலையில் சச்சின் பைலட் துணை முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதால், கட்சிக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுத்து அடுத்த கட்ட நகர்வுக்கு தயராகி வருகிறாராம். அவர் பாஜகவில் இணைவாரா என்ற பரபரப்பு எழுந்துள்ளது.