கழட்டிவிடும் காங்கிரஸ்.. பாஜகவும் அழைக்கவில்லை.. தனித்துவிடப்படும் சச்சின் பைலட்.. செம டிவிஸ்ட்!
ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக திரும்பி இருக்கும் சச்சின் பைலட்டின் துணை முதல்வர் பதவி பறிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வருகிறது.
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக திரும்பி இருக்கும் சச்சின் பைலட்டின் துணை முதல்வர் பதவி பறிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வருகிறது. இவரை பாஜக தரப்பும் அழைக்கவில்லை என்பதால் அரசியலில் இவர் தனித்து விடப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
ராஜஸ்தான் அரசியலில் இன்று மிகப்பெரிய அரசியல் திருப்பங்கள் நடக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். அங்கு முதல்வர் அசோக் கெலாட் ஆட்சி கவிழுமா அல்லது துணை முதல்வர் சச்சின் பைலட்டின் தரப்பு தோல்வி அடையுமா என்று விரைவில் தெரிந்துவிடும்.
தற்போது வந்திருக்கும் புள்ளி விவரங்களின் படி அசோக் கெலாட் தரப்பிற்கு 101 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது. இன்னொரு பக்கம் சச்சின் பைலட் தரப்பிற்கு 18 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது என்கிறார்கள்.
துணை முதல்வராக இருந்தும்.. ராஜஸ்தானில் ஆட்சியை கலைக்க சச்சின் பைலட் துடிப்பது ஏன்? 3 காரணம் இருக்கு
நேற்று புறக்கணிப்பு
நேற்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதற்காக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எல்லோருக்கும் கட்சி கொறடா மூலம் விப் நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது. மீட்டிங்கிற்கு வராத எம்எல்ஏக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனாலும் அசோக் கெலாட் தலைமையில் நடந்த இந்த மீட்டிங்கிற்கு சச்சின் பைலட் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் 12 பேர் வரவில்லை என்று கூறப்படுகிறது.
சமாதானம்
இதையடுத்து சச்சின் பைலட் உடன் சமாதானம் பேச நேற்று மூன்று விதமாக தூது அனுப்பப்பட்டது. முதலில் சச்சின் பைலட்டிற்கு நெருக்கமான மூத்த தலைவர்கள் மூலம் தூது அனுப்பப்பட்டது. அதன்பின் நேரடியாக தொலைக்காட்சிகளில் சச்சினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.அதோடு இன்று காலை சச்சின் பைலட்டிற்கு கடிதங்களும் கூட அனுப்பப்பட்டது.
எதையும் ஏற்கவில்லை
திரும்பி வந்துவிடுங்கள். பேசி தீர்த்துக் கொள்ளலாம். உங்களுக்கு நல்ல பதவி கிடைக்கும். மீண்டும் கட்சிக்குள் வந்து விடுங்கள் என்று அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ் கட்சியின் எந்த அழைப்பையும் சச்சின் ஏற்கவில்லை. என்ன நடந்தாலும் என்னால் வர முடியாது என்று அவர் கூறிவிட்டார். இதனால் ராஜஸ்தானில் காங்கிரஸ் உள்ளே தீர்க்க முடியாத ஒரு பிரச்சனை உருவானது.
என்ன எச்சரிக்கை
இந்த நிலையில் இன்று மீண்டும் அங்கே காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொள்ளாத எம்எல்ஏக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நேற்றே காங்கிரஸ் தரப்பு கூறி இருந்தது. ஆனால் அதையும் மீறி இன்று நடந்த மீட்டிங்கிலும் சச்சின் பைலட் கலந்து கொள்ளவில்லை. அவரின் ஆதரவு எம்எல்ஏக்களும் கூட இன்று நடந்த மீட்டிங்கில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எத்தனை பேர் புறக்கணிப்பு
இன்று நடந்த மீட்டிங்கை மொத்தம் 18 எம்எல்ஏக்கள் புறக்கணித்து இருக்கிறார்கள். இதனால் காங்கிரஸ் தரப்பு அதிர்ச்சியில் உள்ளது. இவர்கள் எல்லோருக்கும் நோட்டீஸ் அனுப்ப காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் காங்கிரஸ் திட்டமிட்டு வருகிறது. இதில் சச்சின் பைலட் மீது ஸ்பெஷல் நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள். அவரின் துணை முதல்வர் பதவி நீக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள்.
தனிமையா?
இவர் தான் பாஜகவில் சேர போகிறேன் என்ற செய்தியையும் மறுத்து இருக்கிறார்கள். அதேபோல் இவரை பாஜக தரப்பும் அழைக்கவில்லை. இவருக்கு பெரிய அளவில் எம்எல்ஏக்கள் ஆதரவு இல்லை என்பதால் பாஜக இவரை கண்டுகொள்ளவில்லை. இதனால் அரசியலில் இவர் தனித்து விடப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள். இதனால் விரைவில் இவர் தனிக்கட்சி தொடங்கவும் வாய்ப்புள்ளது என்கிறார்கள்.