4 அமைச்சர் பதவி.. 3 முக்கிய கோரிக்கை.. காங்கிரஸ் தலைமைக்கு லிஸ்ட் அனுப்பிய சச்சின் பைலட்.. பின்னணி!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கொலட் ஆட்சிக்கு எதிராக திரும்பி இருக்கும் சச்சின் பைலட் அங்கு காங்கிரஸ் தரப்புக்கு மூன்று கோரிக்கைகளை வைத்து இருக்கிறார் என்கிறார்கள்.
காங்கிரஸ் கட்சியின் இளம் உறுப்பினர் மற்றும் நம்பிக்கை நட்சத்திரம் என்று பார்க்கப்பட்ட சச்சின் பைலட் அங்கு ஆளும் கட்சிக்கு எதிராகவே திரும்பி இருக்கிறார். துணை முதல்வரான இவர் முதல்வர் அசோக் கொலட்டை எதிர்க்க தொடங்கி உள்ளார்.
தற்போது தனது ஆதரவு எம்எல்ஏக்கள் உடன் இவர் டெல்லியில் முகாமிட்டு உள்ளார். டெல்லியில் தான் மொத்தம் 30 எம்எல்ஏக்களுடன் இருப்பதாக இவர் கூறியுள்ளார்.
ஆனால் நிலவரம்
ஆனால் இவருக்கு 12-16 எம்எல்ஏக்கள் வரை ஆதரவு அளிக்க வாய்ப்பு உள்ளது. அதற்கு மேல் ஆதரவு அளிக்க வாய்ப்பு இல்லை என்று கூறுகிறார்கள். இன்னொரு பக்கம் ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கொலட் தரப்புக்கு 97-102 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது. அதோடு காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் சுயேட்சைகளின் ஆதரவும் இவர்களுக்கு உள்ளது என்கிறார்கள்.
உண்மை பின்னணி
இவர் இன்று பாஜகவில் சேர வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டது. ஆனால் அதை இவருக்கு நெருக்கமான எம்எல்ஏக்கள் மறுத்துள்ளனர். சச்சின் பைலட் பாஜக செல்ல வாய்ப்பே இல்லை. அது வதந்தி என்று கூறியுள்ளனர். சச்சின் பைலட் காங்கிரசுக்கு திரும்பி செல்வார். ஆனால் அவர் மூன்று கோரிக்கைகளை வைத்து இருக்கிறார் என்று கூறுகிறார்கள்.
என்ன கோரிக்கை
அதன்படி சச்சின் பைலட் தனக்கு ஆதரவு தரும் 4 எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி வேண்டும். நான் கை காட்டும் நபர்களுக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்று கூறியுள்ளார். இரண்டாவது கோரிக்கை இவர்கள் நான்கு பேரில் ஒருவருக்கு உள்துறை பொறுப்பு அளிக்க வேண்டும். ஒருவருக்கு நிதித்துறை பொறுப்பு அளிக்க வேண்டும் என்றும் சச்சின் கோரிக்கை வைத்துள்ளார்.
வேறு என்ன
அதேபோல் கடைசியாக தனக்கு கொடுக்கப்பட்டு இருக்கும் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் பொறுப்பை நீட்டிக்க வேண்டும், என்று கூறியுள்ளார். ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ரகுவீர் மீனா கைப்பற்றுவார் என்று செய்திகள் வெளியானது. இந்தநிலையில் தலைவர் பொறுப்பும் தனக்கு வேண்டும். இதை ஏற்றுக்கொண்டால், ஆட்சிக்கு ஆதரவு தர தயார் என்று சச்சின் பைலட் கூறியுள்ளார் என்கிறார்கள்.