''கைகளை சுத்தமாக கழுவுங்கள்'': கிரிக்கெட்டை 'கை' கழுவிய கையோடு.. யுனிசெப் தூதரான் சச்சின்!
மும்பை: ‘கழிவறைக்கு சென்று வந்த பின்னர் கைகளை சுத்தமாகக் கழுவுங்கள்' என்ற பிரச்சார முழக்கத்துடன் சமூக சேவையில் குதித்துள்ளார் பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர்.
சமீபத்தில் நடைபெற்ற போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். தற்போது தனது வாழ்க்கையின் அடுத்தக்கட்டமாக சமூக சேவையை செய்ய இருக்கிறார்.
அந்தவகையில், ஐக்கிய நாடுகள் (ஐ.நா) அமைப்பின் ஒரு அங்கமான யுனிசெப் அமைப்பின் தெற்காசியாவுக்கான நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டுள்ளார் சச்சின். ‘சுத்தமான கழிவறை; அழுக்கற்ற தூய்மையான கைகள்' என்ற நோக்கத்தோடு செயல்படும் இந்த அமைப்பின் சார்பில் அடுத்த 2 ஆண்டுகளுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய இருக்கிறார் சச்சின்.
நேற்று மும்பையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், தனது இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் குறித்து சச்சின் கூறியதாவது....
2வது இன்னிங்ஸ்....
எனது வாழ்க்கையின் 2-வது இன்னிங்சை தொடங்க அனுமதி அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
முக்கியக்கட்டம்....
யுனிசெப்பின் தூதராக என்னால் முடிந்த அனைத்தையும் செய்ய ஆவலுடன் இருக்கிறேன். இந்த இன்னிங்ஸ் எனது வாழ்க்கையில் மிக மிக முக்கியமானது. அதனால் எனது சிறந்த சேவையை அளிக்க முயற்சிப்பேன்.
கஷ்டமான விஷயம்....
உலக மக்கள் தொகையில் 36 சதவீதம் பேரிடம் பாதுகாப்பான மற்றும் சுத்தமான கழிப்பறை வசதிகள் இல்லை என்பதை அறிந்து ஆச்சரியமடைந்தேன். இவ்வளவு காலமாகியும் இந்த அடிப்படை வசதிகள் கூட செய்து கொடுக்கப்படவில்லை என்பதை நினைக்கும் போது, ஜீரணிப்பதற்கே கடினமாக இருக்கிறது.
அதிர்ச்சித் தகவல்....
நோய் தொற்றினால் வயிற்றுப் போக்கு ஏற்பட்டு நாள் ஒன்றுக்கு 1600 குழந்தைகள் இறப்பதாக இன்னொரு புள்ளி விவரம் மேலும் அதிர்ச்சியை அளிக்கிறது. இது சம்பந்தமாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் யுனிசெப்புக்கு உதவி செய்ய தயாராக உள்ளேன்.
கைகளைக் கழுவுங்கள்....
அந்த உதவி எப்படி இருக்கும் என்றால், ஒரு சோப்பை வைத்து கைகளை சுத்தமாக கழுவ வேண்டும் என்பதை சொல்லி கொடுப்பது தான். கழிவறையை பயன்படுத்திய பிறகு, சோப்பால் கைகளை சுத்தப்படுத்துங்கள் என்பதை குழந்தைகளிடம் எடுத்து கூறுவேன்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.