இசைப் புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு விருந்தளித்து கவுரவப்படுத்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர்
மும்பை : இசைப் புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு தனது இல்லத்தில் விருந்தளித்து கவுரவப்படுத்தியுள்ளார் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர்.
தனது இசையால் உலகையே கட்டிப்போட்டவர் ஏ.ஆர்.ரகுமான். கிரிக்கெட் துறையில் எந்தவித சர்ச்சைகளுக்குள்ளும் சிக்காமல், சப்தமின்றி பல சாதனைகளைப் புரிந்தவர் சச்சின் டெண்டுல்கர்.
இந்த இருவரின் தாயார்களும், தங்களது மகன்களின் வெற்றிக்காக பாடுபட்டதை பாராட்டும் வகையில் மும்பையில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அப்போது ஏ.ஆர்.ரகுமானும், சச்சின் டெண்டுல்கரும் சந்தித்து மனம் விட்டு பேசினர்.
பின்னர் தான் அளிக்கும் விருந்தில் கலந்துகொள்ளுமாறு சச்சின் விடுத்த அழைப்பை ஏற்று, தனது தாயுடன் ஏ.ஆர்.ரகுமான் அவரது இல்லத்திற்கு சென்றார்.
அங்கு அவர்களுக்கு அறுசுவை உணவுகள் பரிமாறப்பட்டன. பின்னர் சச்சின் வெற்றி பெற்ற கோப்பைகளை பார்வையிட்டு அவருக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்களை ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்தார்.
அவர்களுக்கு நன்றி தெரிவித்த சச்சின் இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் தனது பேஸ்புக்கில் சச்சினின் அன்பும், அவர் அளித்த விருந்தும், தனது உள்ளத்தை தொட்டுவிட்டதாக கூறியுள்ளார்.