மது, போதைக்கு எதிரான பிரசாரத்துக்கு என் பெயரை யூஸ் பண்ணிக்கங்க... சச்சின் தாராளம்
திருவனந்தபுரம் : கேரளாவில் மது மற்றும் போதைப் பொருள் பழக்கத்துக்கு எதிரான பிரச்சாரத்தில், சச்சின் டெண்டுல்கர் தனது பெயரை பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கியுள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் பங்கேற்கும் கேரளா பிளாஸ்டர்ஸ் கால்பந்து கிளப் (கேபிஎப்சி) உரிமையாளராக உள்ள சச்சின் டெண்டுல்கருடன், நடிகர்கள் சிரஞ்சீவி, நாகார்ஜுனா, தொழிலதிபர் நிம்மகட்டா பிரசாத் ஆகியோர் அந்த அணியின் புதிய முதலீட்டாளர்களாக இணைந்துள்ளனர். இதனிடையே, அவர்கள் கேரள தலைமைச் செயலகத்தில் முதல்வர் பினராயி விஜயனை இன்று சந்தித்துப் பேசினர்.
இந்தச் சந்திப்பிற்கு பின்னர் பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கேரளாவில் மது மற்றும் போதைப்பொருள் உபயோகத்திற்கு எதிரான பிரச்சாரத்தில் அரசு ஈடுபட்டுள்ளது. இந்தப் பிரச்சாரத்திற்கு வலுசேர்க்கும் விதமாக கேரள அரசுக்கு தனது பெயரை பயன்படுத்திக் கொள்ள சச்சின் அனுமதி வழங்கியுள்ளார். இந்தப் பிரச்சாரத்திற்கு தான் ஒத்துழைக்கவும் ஒப்புக்கொண்டுள்ளார்.
மேலும், இதுதொடர்பான பிராண்ட் அம்பாசடராக சச்சின் டெண்டுல்கரை நியமிப்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும். கேரளாவில் திறமையான கால்பந்து வீரர்களை உருவாக்கும் நோக்கில், தங்கும் வசதியுடன் கூடிய கால்பந்து அகாடெமி தொடங்க கேரள மாநில கால்பந்து சங்கம் சம்மதம் தெரிவித்துள்ளது என்று அவர் கூறினார்.
சச்சின் டெண்டுல்கர் கூறுகையில், கேரளாவில் அடுத்த 5 ஆண்டுகளில் சர்வதேச தரத்திலான கால்பந்து வீரர்களை உருவாக்க வேண்டும் என்பதே கேபிஎப்சி-யின் குறிக்கோள் என்றார்.