மும்பையில் ஆபத்தான நடைமேம்பாலங்களை சீரமைக்க ரூ.2 கோடி நிதி கொடுத்த சச்சின்
ஆபத்தான நிலையில் உள்ள நடைமேம்பாலங்களை சீரமைக்க சச்சின் டெண்டுல்கர் தனது எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.2 கோடி நிதியை ஒதுக்கீடு செய்தார்.
மும்பை: மிகவும் சேதமடைந்துள்ள நடைமேம்பாலங்களை சீரமைக்க சச்சின் டெண்டுல்கர் தனது எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.2 கோடியை ஒதுக்கீடு செய்தார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த மாதம் மும்பை எல்பின்ஸ்டோன் நடைமேம்பாலத்தில் மின் கசிவால் விபத்து என வதந்தி பரவியது. இதனால் அங்கிருந்தோர் முண்டியடித்துக் கொண்டு ஓடியதில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில் மும்பையில் ஆபத்தான நிலையில் உள்ள நடைமேம்பாலங்களை சீரமைக்க கிரிக்கெட் வீரரும், மாநிலங்களவை உறுப்பினருமான சச்சின் டெண்டுல்கர் ரூ. 2 கோடி ரூபாய் நிதி அளித்துள்ளார்.
இதுகுறித்து மும்பை புறநகர் ஆட்சியருக்கு அவர் எழுதிய கடிதத்தில், சமீபத்தில் மும்பை எல்பின்ஸ்டோன் நடைமேம்பால நெரிசலில் 25 அப்பாவிகள் உயிரிழந்ததை சுட்டி காட்டியுள்ளார்.
மேலும் பொறுப்பான குடிமகன் என்ற முறையில் இதுபோன்ற அசம்பாவித சம்பவம் மீண்டும் நடைபெறக்கூடாது. எனவே, நடைமேம்பாலங்களை சீரமைக்க நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து வடக்கு ரயில்வே, மத்திய ரயில்வேக்கு தலா ரூ.1 கோடி நிதியை தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து அளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.