நண்பன் காம்ப்ளியுடன் பள்ளிப் பருவத்தில் எடுத்த போட்டோவை வெளியிட்ட சச்சின்
மும்பை: முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தன்னுடன் பள்ளியில் படித்த வினோத் காம்ப்ளியுடன் சிறுவயதில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
முன்னாள் கிரிக்கெட் வீரர்களான சச்சின் டெண்டுல்கரும், வினோத் காம்ப்ளியும் பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்தே நண்பர்கள். அவர்கள் பள்ளி அளவில் 664 ரன்கள் அடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்கள். அண்மை காலமாக அவர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை இல்லை என்று கூறப்படுகிறது.
கடந்த 2013ம் ஆண்டில் சச்சின் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகையில் ஆற்றிய உரையில் காம்ப்ளியின் பெயரை குறிப்பிடவில்லை. மேலும் ஓய்வு பெறும் அன்று அவர் அளித்த விருந்துக்கும் காம்ப்ளி அழைக்கப்படவில்லை.
சச்சின் தனது உரையில் தன்னைப் பற்றி பேசாதது, விருந்துக்கு அழைக்காததால் வருத்தம் அடைந்ததாக காம்ப்ளி தெரிவித்திருந்தார். இந்நிலையில் சச்சின் தான் காம்ப்ளியுடன் சிறுவயதில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
பழைய நினைவுகள் என்று தலைப்பிட்டு அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையதளத்தில் தீயாக பரவியுள்ளது.