கேரளாவில் சச்சின் தெண்டுல்கர் வாங்கும் ஆடம்பர மாளிகை... விலை என்ன? அது மட்டும் சஸ்பென்ஸ்
கொச்சி : சச்சின் தெண்டுல்கர் கேரளாவில் விலைக்கு வாங்க திட்டமிட்டிருக்கும் ஆடம்பர பங்களாவை படகு பயணம் வழியே சென்று பார்வையிட்டார்.
கடவுளின் சொந்த நாடு என அழைக்கப்படும் கேரளாவில் உள்ள பனங்காடு பகுதி அருகே நீச்சல் குளத்துடன் கூடிய ஆடம்பர பங்களா ஒன்றை தனியார் நிறுவனத்தினரிடம் இருந்து விலைக்கு வாங்க கேரளா பிளாஸ்டர்ஸ் என்ற கால்பந்து அணியின் உரிமையாளர்களில் ஒருவரான சச்சின் தெண்டுல்கர் திட்டமிட்டுள்ளார்.
கொச்சியில் நீர்ப்பரப்பு பின்னால் தெரியும் வகையில் கரையை ஒட்டிய பகுதியில் கட்டப்பட்டுள்ள பங்களாக்களில் ஒன்றை சச்சின் தேர்வு செய்துள்ளார். அந்த பகுதிக்கு படகு பயணம் வழியே சென்ற அவர், கேரளாவின் அழகை முதன்முறையாக பார்க்கிறேன் என்று மகிழ்ச்சியுடன் கூறினார். கேரளாவின் அழகில் மகிழ்ச்சியடைய நான் தொடர்ந்து வருவேன் என்றும் கொச்சிக்கு இனி வரும்போது கூடுதல் நேரம் இங்கு செலவிட நான் முயற்சி செய்வேன் எனவும் சச்சின் தெரிவித்தார்.
3 அடுக்குகளுடன் 5 ஆயிரம் சதுர அடியில் அமைந்துள்ள அந்த பங்களாவை பார்த்த பின்பு அதே படகில் ஓட்டலுக்கு அவர் திரும்பினார். அந்த இடத்தை விட்டு செல்லும் முன், தங்களது வீடுகளின் மேற்கூரையில் நின்றிருந்த பனங்காடு மக்களிடம் கேரளா பிளாஸ்டர்ஸ் அணிக்கு ஆதரவு தரும்படி அவர் கேட்டு கொண்டார். அந்த பங்களாவின் சிறப்பு அம்சங்கள் குறித்து தனியார் நிறுவன அதிகாரி ஒருவர் கூறும்போது, ஆடம்பர பங்களா குடியிருப்பின் மேற்கூரையில் ஒரு நீச்சல் குளம் மற்றும் கடலை ஒட்டிய பகுதியில் அமைந்த முடிவற்ற வகையில் கட்டப்பட்ட மற்றொரு நீச்சல் குளமும் என இரு நீச்சல் குளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
செக்யூரிட்டி அறையில் இருந்து பார்க்கும் வகையிலான அதிக துல்லியமிக்க குரலை பதிவு செய்யும் வசதியுடன் கூடிய சி.சி.டி.வி. கேமிரா ஒன்று உள்ளது. அதனுடன், பார்வையாளர்களுடன் தொடர்பு கொள்ளும் வகையில் வீடியோ போன் மற்றும் 24 மணிநேர பாதுகாப்பு மற்றும் ஒவ்வொரு பங்களாவில் இருந்தும் மற்றொரு பங்களாவுக்கு தொடர்பு கொள்ள இண்டர்காம் வசதி ஆகிய சிறப்பு அம்சங்களை அந்த மாளிகை உள்ளடக்கி உள்ளது என அவர் கூறியுள்ளார்.
சர்வதேச விளம்பர அமைப்பின் வெள்ளி விழா கொண்டாட்டத்திற்காக நடைபெறும் 3 நாள் மாநாட்டின் இறுதி நாளான நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தெண்டுல்கர் கலந்து கொண்டார்.