நாக்பூரில் ரூ. 10 கோடி கேட்டு டாக்டரின் 8 வயது மகன் கடத்திக் கொலை - 2 பேர் கைது
நாக்பூர்: நாக்பூர் டாக்டரின் 8 வயது மகன் கடத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் இருவரைக் கைது செய்துள்ளனர்.
மராட்டிய மாநிலம் நாக்பூர் வார்தம நகர் பகுதியில் உள்ள சாப்ரு நகரை சேர்ந்த பல் டாக்டர் மகேஷ் சந்தக். இவரது 8 வயது மகன் யுக், கடந்த திங்களன்று பள்ளிக்குச் சென்றவன் வீடு திரும்பவில்லை.
மகன் யுக்கைக் காணவில்லை எனக் கூறி அன்றிரவு போலீசில் புகார் அளித்தார் டாக்டர் மகேஷ். அப்போது மகேசுக்கு செல்போன் அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய மர்மநபர்கள், ‘யுக்கை தாங்கள் கடத்தி வைத்துள்ளதாகவும், ரூ.10 கோடி கொடுத்தால் விடுவிப்பதாகவும்' தெரிவித்துள்ளனர்.
இத்தகவலை போலீசாரிடம் தெரிவித்துள்ளார் மகேஷ். அவர்கள் அந்த தொலைபேசி எண்ணின் அடிப்படையில் விசாரணையைத் துவக்கினர். இது தொடர்பாக நாக்பூரின் அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. நாக்பூர் நகரின் நாலாபுறமும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை நாக்பூரில் சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றித் திரிந்த இரண்டு பேரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். அதில், சிறுவன் யுக்கை கடத்தியது அவர்கள் தான் என்பது தெரிய வந்தது. தொடர் விசாரணையில் சிறுவன் யுக்கை அவர்கள் கொடூரமாக கொலை செய்ததையும் அவர்கள் ஒப்புக் கொண்டனர்.
இதைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களது பெயர் ராஜேஷ் தவார் (19), அரவிந்த் சிங் (23) என்றும், இவர்களில் ராஜேஷ் தவார் டாக்டர் மகேஷின் ஆஸ்பத்திரியில் வேலை பார்த்தவர் என்றும் தெரியவந்தது. முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறி கடந்த 2 வாரத்துக்கு முன்பு தான் ராஜேஷை வேலையில் இருந்து நீக்கியுள்ளார் மகேஷ்.
இதனால் மகேஷ் மீது கடும் ஆத்திரத்தில் இருந்த ராஜேஷ், தன்னை வேலையை விட்டு நீக்கிய டாக்டரை பழிவாங்க திட்டமிட்டுள்ளார். இதற்கு தன் சக பணியாளரான அரவிந்த்தையும் சேர்த்துக் கொண்டார்.
இருவரும் சேர்ந்து டாக்டரின் மகன் யுக்கை கடத்தியுள்ளனர். முதலில் டாக்டரிடமிருந்து பணம் பறிக்க மட்டுமே திட்டமிருந்த அவர்கள், போலீஸ் தங்களைத் தேடுவதை அறிந்து யுக்கை கொலை செய்ததாக போலீசில் தெரிவித்துள்ளனர்.
நாக்பூரை அடுத்த பதன்சாங்கி அருகே உள்ள பபுல்கேரா கிராமத்தில் வைத்து சிறுவனைக் கொலை செய்த குற்றவாளிகள் சிறுவனின் உடலை அதே பகுதியில் புதைத்தனர். பின்னர் தப்பி செல்ல முயன்றபோது தான் போலீசிடம் சிக்கிக் கொண்டனர்.
மண்ணில் புதைக்கப்பட்ட சிறுவனின் உடலை போலீசார் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பாக கைது செய்யப்பட்ட 2 பேர் மீதும் கொலை, கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.