உ.பி.: பார்வையற்ற இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற சாமியார்
லக்னோ: உத்தர பிரதேசத்தில் தன்னிடம் சிகிச்சை பெற வந்த 22 வயது பார்வையில்லாத இளம்பெண்ணை சாமியார் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று தாக்கியுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தில் உள்ள ஹல்தி பகுதியைச் சேர்ந்த 22 வயது பெண் ஒருவருக்கு பார்வை இல்லாமல் அவதிப்பட்டு வருகிறார். அவர் தனது கண்ணில் பார்வையை வர வழைக்குமாறு கூறி அப்பகுதியைச் சேர்ந்த சாமியார் தர்ம்தேவ் என்கிற பிர்ஜு பாபாவை சந்தித்து கோரிக்கை விடுத்தார்.
சாமியாரோ அந்த பெண் பார்வையற்றவர் என்று கூட பார்க்காமல் அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். அதற்கு அந்த பெண் எதிர்க்கவே சாமியார் ஆத்திரம் அடைந்தார். இதையடுத்து பிர்ஜு பாபா அந்த பெண்ணை கூர்மையான ஆயுதத்தால் தாக்கினார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பிர்ஜு பாபாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பார்வையற்ற பெண்ணை சாமியார் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.