பஞ்சாபில் மத வழிபாட்டில் கலந்து கொண்டு ஊர் திரும்பிய சாது சுட்டுக் கொலை
லூதியானா: பஞ்சாபில் மர்ம நபர்கள் சாமியார் ஒருவரை சுட்டுக் கொலை செய்துள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவை சேர்ந்தவர்கள் சாதுக்களான புபிந்தர் சிங்(55) மற்றும் ரஞ்சித் சிங் தந்த்ரிவாலா. அவர்கள் மற்றும் அவர்களின் பக்தர்கள் சேர்ந்து இஸ்வால் கிராமத்தில் நடந்த மத நிகழ்ச்சிக்கு செவ்வாய்க்கிழமை நான்கு கார்களில் சென்றனர்.
நிகழ்ச்சி முடிந்து அவர்கள் நேற்று இரவு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது சித்வான் கால்வாய் அருகே நீல நிற உடை அணிந்திருந்த சில மர்ம நபர்கள் சாதுக்களின் கார்களை நிறுத்தினர்.
அவர்கள் சாதுக்களை காரில் இருந்து வெளியே இழுத்து பேஸ்பால் பேட், வாள் ஆகியவற்றால் தாக்கினர். மேலும் அவர்கள் புபிந்தர் சிங்கை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.
இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த சாது ரஞ்சித் சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.