கும்பமேளாவில் பங்கேற்க அனுமதி கோரி உண்ணாவிரதம் இருக்கும் சாமியார் சாத்வியின் உடல்நலம் மோசம்
போபால்: மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட பெண் சாமியாரான சாத்வி பிரக்யா மருத்துவமனையில் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருவதால் அவரின் உடல்நலம் மோசமடைந்துள்ளது.
மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார் பெண் சாமியாரான சாத்வி பிரக்யா சிங் தாகூர். உஜ்ஜைனி நகரில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் சிம்ஹஸ்தா கும்பமேளா நிகழ்ச்சி தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஷிப்ரா நதியில் நீராட அவர் அனுமதி கோரினார். ஆனால் பாதுகாப்பு காரணங்களை கூறி சிறை அதிகாரிகள் அவருக்கு அனுமதி மறுத்துவிட்டனர்.
இதையடுத்து அவர் அனுமதி கோரி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை திங்கட்கிழமை துவங்கினார். போபாலில் உள்ள குஷிலால் ஷர்மா ஆயுர்வேத மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் அங்கு உணவு, மருந்துகளை எடுத்துக் கொள்ளாமல் உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகிறார்.
இதனால் அவரது உடல்நிலை மோசம் அடைந்துள்ளது. சாத்வி கும்பமேளாவில் கலந்து கொள்ள போபால் நீதிமன்றம் அனுமதி அளித்தும் சிறை அதிகாரிகள் அவரை விடாமல் உள்ளனர் என்று சாத்வியின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.