வீட்டுக்காவல் கோரிய 'சஹாரா' சுப்ரதா ராய் மனு தள்ளுபடி
சஹாரா குழுமத் தலைவர் சுப்ரதா ராய், முதலீட்டாளர்களின் ரூ.20 ஆயிரம் கோடி பணத்தை திருப்பி கொடுக்கவில்லை என்பது புகார். இந்த புகாரின் அடிப்படையில் உ.பி. போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
சுப்ரதா ராயை ஜாமீனில் விட ரூ.10 ஆயிரம் கோடி தர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் சஹாரா குழுமம் அவ்வளவு தொகையை செலுத்த முடியாது என்று கூறிவிட்டது.
இந்நிலையில் சஹாரா குழுமத்தில் உள்ள அசையா சொத்துக்களை விற்க வேண்டுமென்றால் சுப்ரதா ராயை வீட்டுக்காவலில் வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை வீசாரித்த உச்சநீதிமன்றம், அசையா சொத்துக்களை விற்றுக்கொள்ளலாம். ஆனால் சுப்ரதா ராய்க்கு வீட்டுக்காவல் வழங்க முடியாது என்று கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்தது. இதனால் சுப்ரதா ராய் தொடர்ந்தும் சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.