சஹரன்பூர் கலவரம்: 3 பேர் பலி - 20 பேர் கைது- தொடர்கிறது பதட்டம்- ஊரடங்கு அமல்
சஹரன்பூர், உ.பி: உத்தரப் பிரதேச மாநிலம் சஹரன்பூரில் திடீரென மூண்ட பெரும் கலவரத்தில் 3 பேர் பலியான நிலையில் இதுதொடர்பாக 20 பேரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
நிலப் பிரச்சினை தொடர்பாக சீக்கியர்கள் மற்றும் முஸ்லீம்களுக்கு இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பும் பயங்கரமாக மோதியது. பல வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. இதையடுத்து போலீஸார் துப்பாக்கி சூடு நடத்தினர். கலவரம் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலியானார்கள். 5 போலீஸார் உள்பட 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
உயிரிழந்தவர்களில் வியாபாரிகள் சங்க தலைவர் ஹரிஷ் கோச்சார் என்பவரும் அடக்கம். அப்பகுதியில் தற்போது ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது தொடர்ந்து அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது. இதுவரை 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரச்சினையைத் தீர்க்க அமைதிக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் சந்தியா திவாரி கூறியுள்ளார். சம்பவப பகுதியில் 600க்கும் மேற்பட்ட புற ராணுவப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இதுதொடர்பாக உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவுடன் தொலைபேசியில் ஆலோசனை நடத்தியுள்ளார்.
கடந்த நான்கு ஆண்டுகளாகவே இங்கு பிரச்சினை நிலவி வருகிறது. இப்பகுதியில் வசிக்கும் சீக்கியர்கள், தங்களது குருத்வாராவை விரிவுபடுத்த விரும்பி அதற்கான முயற்சிகளில் இறங்கினர். ஆனால் அதற்கு அருகில் வசிக்கும் இஸ்லாமியர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இப்பகுதியில், 10 வருடங்களுக்கு முன்பு மசூதி கட்ட இடம் ஒதுக்கப்பட்டதாக அவர்கள் கூறுகின்றனர். இதுதொடர்பாகத்தான் இரு தரப்புக்கும் இடையே பூசல் இருந்து வந்தது. இது நேற்று கலவரமாக வெடித்து விட்டது.
இந்த விவகாரத்தில் உள்ளூர் கோர்ட்டில் சீக்கியர்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததைத் தொடர்ந்து அவர்கள் குருத்வாராவை விரிவுபடுத்தும் பணியைத் தொடங்கினர். ஆனால் இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே இரு தரப்பும் மோதலில் இறங்கினர்.