சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான சாகித்ய அகாடமி விருது- தமிழில் கெளரி கிருபானந்தன் பெறுகிறார்
டெல்லி: சாகித்ய அகாடமி சார்பில் 2015 ஆம் ஆண்டிற்கான சிறந்த மொழிபெயர்ப்பாளார்களுக்கான விருதுகள் பட்டியலில் தமிழ் மொழி சார்பாக விருதுக்கு கெளரி கிருபானந்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த விருதுகள் மொத்தம் 23 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற சாகித்ய அகாடமியின் செயற்குழுக் கூட்டத்தில் வெற்றி பெற்றவர்களுக்கான இறுதி பட்டியலுக்கு அகாடமியின் தலைவர் விஸ்வநாத் பிரசாத் ஒப்புதல் அளித்தார்.
ஒவ்வொரு மொழியை சேர்ந்த 3 தேர்வுக் குழுவினர் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் புத்தகங்கள் தேர்வு செய்யப்பட்டன என்று சாகித்ய அகாடமி சார்பில் கூறப்பட்டுள்ளது.
தமிழில் இவருக்குதான்:
இந்த பட்டியலில் தமிழ் மொழியில் கௌரி கிருபானந்தனுக்கு அவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளருமான கெளரி கிருபானந்தன் தமிழ் மற்றும் தெலுங்கில் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். தெலுங்கில் எட்டனப்புடி சுலோச்சனா ராணி உள்ளிட்டோரின் 60க்கும் மேற்பட்ட படைப்புகளை கிருபானந்தன் மொழிபெயர்த்துள்ளார்.
விருதும், பணமும்:
வெற்றி பெற்றவர்களுக்கு விருதும், ரூபாய் 50 ஆயிரம் பரிசுப் பணமும் வழங்கப்படும். இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் விழாவில் இந்த விருது வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலக்கிய படைப்பாளிகளுக்கான விருது:
சாகித்திய அகாடமி விருது சிறந்த இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு, இந்திய அரசால் ஒவ்வோர் ஆண்டும் தேசிய அளவிலும், மாநில அளவிலும் வழங்கப்படும் மதிப்பிற்குரிய விருதாகும். இவ்விருதில் பரிசுத்தொகையும், ஒரு பட்டயமும் வழங்கப்படுகின்றன.
24 இந்திய மொழிகள்:
24 இந்திய மொழிகளில் சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சனம் போன்ற பலவகையான படைப்புகளுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.