சீரடி சாய்பாபா- துவாரகை சங்கராச்சாரியார் 'பஞ்சாயத்தில்' தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு
டெல்லி: சீரடி சாய்பாபாவை கடவுளாக வழிபடக் கூடாது என்று துவாரகை சங்கராச்சாரியார் விமர்சித்தது தொடர்பான வழக்கில் தலையிட உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.
மகாராஷ்டிரா சீரடியில் உள்ள சாய்பாபா கோவிலை நிர்வகித்து வரும் சாய்தாம் அறக்கட்டளை சார்பில் உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
அதில், சீரடி சாய்பாபாவை அவமதிக்கும் வகையில் துவாரகா பீடாதிபதி ஸ்வரூபானந்தா அறிக்கைகள் வெளியிட்டு வருகிறார். அவர் சாய்பாபா குறித்து எந்த அறிக்கையும் வெளியிடக் கூடாது என்று மத்திய அரசுக்கு உத்தரவிடவேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி டி.எஸ். தாக்கூர் பெஞ்ச் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இப் பிரச்சினையில் நீதிமன்றத்தால் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது. சட்டத்தை மீறும் விதமாகவோ, வன்முறையை தூண்டும் விதமாகவோ கூறப்பட்டு இருந்தால் அது பற்றி மனுதாரர் சிவில் வழக்கோ அல்லது கிரிமினல் வழக்கோ தொடரலாம் என்று நீதிபதி தெரிவித்து வழக்கை முடித்து வைத்தார்.