சாய்பாபா பக்தர்கள் போராட்டத்தை கைவிடாவிட்டால் தாக்குவோம்: நாகா சாதுக்கள் மிரட்டல்!
ஹரித்வார்: துவாரகை சங்கராச்சாரியாருக்கு எதிராக சீரடி சாய்பாபா பக்தர்கள் நடத்தி வரும் போராட்டங்களை 2 நாட்களுக்குள் கைவிடாவிட்டால் வீதிகளில் இறங்கி கடுமையாக தாக்குதல் நடத்துவோம் என்று 'நிர்வாண' சாமியார்களான நாகா சாதுக்கள் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மத்திய அமைச்சர் உமாபாரதி நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் தம்மை சாய்பாபாவின் பக்தர் என்று கூறியிருந்தார். இதற்கு துவாரகை பீட சங்கராச்சாரியார் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
சாய்பாபா ஒரு முஸ்லிம்.. அவரை இந்து கடவுளின் அவதாரம் என்று வழிபடுவதா என்று அவர் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு சாய்பாபா பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவரது உருவபொம்மைகளையும் எரித்தனர்.
பல மாநிலங்களில் துவாரகை சங்கராச்சாரியார் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து துவாரகை சங்கராச்சாரியாருக்கு ஆதரவாக ஹரித்வார் மற்றும் அலகாபாத்தில் நிர்வாணமாக சாமியார்களான நாகா சாதுக்கள் ஒன்று திரண்டு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க அழைப்பு விடுக்கப்பட்டது.
இது தொடர்பாக ஜூனா அகாடாவின் தலைமை குரு ஹரி கிரி கூறுகையில், அகடாக்களாகிய நாங்கள் இந்து சனாதான தர்மத்தைப் பாதுகாக்கும் படையினர். எங்களது நாகா சாதுக்கள் (நிர்வாண சாமியார்கள்) சங்கராச்சாரியை பாதுகாப்பவர்கள்.
சங்கராச்சாரியாருக்கு எதிரான போராட்டத்தைக் கைவிட சாய்பாபா பக்தர்களுக்கு 2 நாட்கள் கெடு விதிக்கிறோம். அதையும் மீறி அவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்தால் வீதிகளில் ஓடவிட்டு அவர்களை தாக்குவோம் என்றார்.
இதனால் புனித நகரங்களான வாரணாசி, ஹரித்வார், அலகாபாத்தில் பதற்றம் நீடித்து வருகிறது.