மும்பை தாக்குதலை மையமாகக் கொண்ட பாலிவுட் படம்... ஹபீசின் மனுவால் தடை விதித்தது பாகிஸ்தான் நீதிமன்றம்
லாகூர் : மும்பைத் தாக்குதலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தி திரைப்படத்தை வெளியிடக்கூடாது என்று கோரிய தீவிரவாதி ஹபீஸ் சையதின் மனுவை ஏற்று அந்த படத்தை பாகிஸ்தானில் திரையிட லாகூர் உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களை மையமாக வைத்து ஃபேண்டம் என்ற பெயரில் இந்தி திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சயீப் அலிகான், கேத்ரீனா கைப் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை கபீர் கான் இயக்கி உள்ளார்.
உலகம் முழுவதும் ஃபேண்டம் இந்தி திரைப்படம் வரும் 28-ந் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில், மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தின் நிறுவனரும், தற்போதைய ஜமாத் உத் தவா அமைப்பின் தலைவருமான ஹபீஸ் சயீத், லாகூர் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதில் தனக்கும் தனது இயக்கத்து எதிராகவும் மோசமான, ஆபாச கருத்துக்களை பரப்புவதால் ஃபேண்டம் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இது தொடர்பாக பதில் அளிக்க பாகிஸ்தான் அரசுக்கு லாகூர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தப் படத்தை வெளியிடும் எண்ணம் இல்லை என பாகிஸ்தான் அரசு பதில் மனு தாக்கல் செய்தது.
இதையடுத்து ஃபேண்டம் இந்தி படத்தை பாகிஸ்தானில் வெளியிட தடை விதித்து லாகூர் உயர்நீதிமன்ற நீதிபதி ஷாஹித் பிலால் ஹசன் நேற்று உத்தரவிட்டார்.