65 வயது மவுனச்சாமியார் சுட்டுக்கொலை... மேற்குவங்காளத்தில் மர்மநபர்கள் அட்டூழியம்
பர்டுவான்: மேற்கு வங்காளத்தில் ஆசிரமத்தில் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த மவுனச் சாமியாரை சரமாரியாகச் சுட்டதில், சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாகப் பலியானார்.
மேற்குவங்காள மாநிலம் பர்டுவான் மாவட்டம் சன்ன கிராமத்தில் ஆசிரமம் அமைத்து வாழ்ந்து வருபவர் கர்ஜ்பசிந்து சாட்டோபாத்யா என்ற சாமியார். 65 வயதான இவர் மவுன சாமியார் என மக்களால் அழைக்கப் படுகிறார். கிட்டத்தட்ட 35 ஆண்டுகளாக கர்ஜ்பசிந்து சாமியார் இந்த ஆசிரமத்தில் தங்கி இறைபணியாற்றி வருவதாகச் சொல்லப் படுகிறது.
இந்நிலையில், நேற்றிரவு ஆசிரமத்தில் உள்ள அவரது அறையில் புகுந்த மர்ம மனிதர்கள் மவுனசாமியாரை நோக்கி சரமாரியாகச் சுட்டுள்ளனர். இதில், குண்டடி பட்டு சம்பவ இடத்திலேயே சாமியார் உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். சாமியாரை சுட்டுக்கொன்ற மர்ம ஆசாமிகள் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்பது குறித்து அவர்கள் விசாரித்து வருகின்றனர்.
சமீபகாலமாக, சாமியார்களைக் குரிவைத்து மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி வருவது மேற்கு வங்காளத்தில் அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூட இதேபோல், இரண்டு சாமியார்கள் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப் பட்டது குறிப்பிடத்தக்கது.