ஃப்ரெஷர்கள் சம்பளம் உயராதாம்.. தொழிலாளர் சங்கம் அமைக்கும் கட்டாயத்தில் இந்திய ஐடி துறை
பெங்களூர்: இன்ஜினியரிங் படித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், தகவல் தொழில்நுட்ப துறையில், ஃப்ரெஷர்களுக்கு சம்பளத்தை உயர்த்தும் எண்ணம் அவை சார்ந்த தொழில் நிறுவனங்களுக்கு இல்லை. விலையேற்றத்திற்கு நடுவேயும், ஊதிய உயர்வை அமல்படுத்த பிரபல நிறுவனங்கள் தயார் இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ போன்ற பல முன்னணி நிறுவனங்களின் மனிதவள மேம்பாட்டு பிரிவு தலைவர்கள் வட்டாரங்களில் நிலவும் தகவல்கள் இதை உறுதி செய்கின்றன.
தேவை மற்றும் சப்ளை நடுவே தற்போது மிகப்பெரிய இடைவெளி உருவாகியுள்ளதுதான் ஊதிய உயர்வை ரத்து செய்வதற்கான காரணம். சில வருடங்கள் முன்புவரை பணி மற்றும் வேலை தேடுவோர் இடையே சீரான வளர்ச்சி இருந்தது.
5 மடங்கு அதிகம்
இப்போதுள்ள சூழ்நிலையில், வேலைதேடுவோர் எண்ணிக்கை, பணி எண்ணிக்கையைவிட 5 மடங்கு அதிகமாக உள்ளதாக, நாஸ்காம் தனது அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டியுள்ளது. இதுதான் சம்பள உயர்வு குறித்து நிறுவனங்கள் யோசிக்காமல் இருக்க முக்கிய காரணம்.
விப்ரோ சொல்கிறது
ஃப்ரெஷர்களுக்கான ஆண்டு சம்பளம், ரூ.3 லட்சம் முதல் ரூ.3.50 லட்சத்திற்குள்தான் இருக்கப்போகிறது. அதில் இவ்வாண்டு பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை என்று கூறுகிறார், விப்ரோ நிறுவன ஹெச்.ஆர். பிரிவு தலைவர் சவுரப் கோவில்.
10 லட்சம் இன்ஜினியர்கள்
இந்தியாவில் ஆண்டுக்கு 10 லட்சம் இன்ஜினியர்கள் உருவாக்கப்பட்டுக் கொண்டுள்ளார்கள். அதே நேரம் ஐடி துறையில் உள்ள வேலை வாய்ப்புகள் எண்ணிக்கை, 2 லட்சத்தில் இருந்து 3 லட்சத்திற்குள்தான் உள்ளது.
லேசான உயர்வு
அமெரிக்காவை சேர்ந்த காக்னிசன்ட் கடந்த ஆண்டு ஃப்ரெஷர்களுக்கான ஆண்டு ஊதியத்தை ரூ.3.05 லட்சத்தில் இருந்து ரூ.3.35 லட்சமாக உயர்த்தியது. டிசிஎஸ் நிறுவனம், ரூ.3.18 லட்சத்தில் இருந்து ரூ.3.30 லட்சமாக உயர்த்தியது. ஆனால், இது சிறு அளவிலான ஊதிய உயர்வுதான் என்று தொழில் துறை வல்லுநர்கள் சுட்டி காட்டுகிறார்கள்.
வேறு நிறுவனங்கள்
அதேநேரம், காக்னிசன்ட் மற்றும் டிஎஸ்சை போல வேறு எந்த பெரிய அல்லது நடுத்தர நிறுவனமும் ஃப்ரெஷர்களுக்கான ஊதியத்தை உயர்த்த முன்வரவில்லை என்பதையும் கவனிக்க வேண்டியுள்ளது.
சங்கம்
இதேபோன்ற தேக்க நிலை காணப்பட்டால், அது நீண்ட காலத்தில், ஐடி நிறுவனங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்றும், ஐடி நிறுவனங்களில் தொழிலாளர் சங்கங்கள் ஆரம்பிக்கப்பட வாய்ப்பு ஏற்படும் என்றும் சில வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.
யூனியன் தேவை
ஐடி துறையில் தொழிலாளர் யூனியர்கள் ஆரம்பிக்கப்பட வாய்ப்புள்ளது என்ற வார்த்தை மிகவும் அதிகம் போல தெரிந்தாலும், அதுவும் நடக்க வாய்ப்புள்ளது என்று இத்துறை சார்ந்த வல்லுநர் அகிலேஷ் டிலோடியா மற்றும் ஜெய்குமார் தோஷி சுட்டிக்காட்டுகிறார்கள்.