லோக்பால் வந்தால் பிரதமர், சிபிஐக்கு சிக்கல்..!
டெல்லி: ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க லோக்பால் மசோதா, பெரும்பாலான கட்சிகள் முன்வைத்த திருத்தங்களை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது.
அன்னா ஹசாரே போன்ற சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியதைத் தொடர்ந்து லோக்பால் மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முன்வந்தது. ஆனால் அந்த மசோதா வலுவானதாக இல்லை என்று குற்றம்சாட்டப்பட்டது.
தற்போது வலுவான லோக்பால் மசோதாவை வலியுறுத்தி ஹசாரே சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இந்த நிலையில் மத்திய அரசும் முந்தைய லோக்பால் மசோதாவில் திருத்தங்களை மேற்கொண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. வரலாற்று சிறப்புமிக்க மசோதா நேற்று ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது.
புதிய லோக்பால் மசோதா பற்றிய ஒரு பார்வை
லோக் ஆயுக்தாக்கள்
திருத்தங்களுடன் கூடிய லோக்பால் மசோதாவானது 365 நாட்களுக்குள் லோக் ஆயுக்தாக்களை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. லோக் ஆயுக்தா எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதை மாநிலங்களே தீர்மானித்துக் கொள்ளலாம்.
முந்தைய மசோதாவிலோ, மாநிலங்களில் லோக் ஆயுக்தாக்களை மத்திய அரசுதான் உருவாக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
லோக்பாலின் கட்டமைப்பு
லோக்பால் அமைப்பைப் பொறுத்தவரை ஒரு தலைவர், 8 உறுப்பினர்கள் இடம்பெறுவர். இவர்களில் 50% பேர் நீதித்துறை உறுப்பினர்களாக இருப்பர். எஞ்சிய 50% பேர் உறுப்பினர்கள் தாழ்த்தப்பட்ட, பழங்குடி, மிகப் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மற்றும் பெண்களாக இருக்க வேண்டும்.
முந்தைய மசோதாவிலோ, லோக்பால் தலைவராக உச்சநீதிமன்ற நீதிபதிதான் இருக்க வேண்டும் அல்லது பணியில் இருக்கும், ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியோ இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
தேர்வு கமிட்டி
லோக்பாலுக்கான தேர்வுக் குழுவில் பிரதமர், லோக்சபா சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி இடம்பெற்றிருப்பர். இக்குழுவின் 5வது நபரை ஏனைய 4 உறுப்பினர்களின் பரிந்துரையின் அடிப்படையில் ஜனாதிபதி நியமித்துக் கொள்ளலாம்.
முந்தைய மசோதாவிலோ, 5வது நபரை ஜனாதிபதி மட்டுமே நியமிக்க முடியும் என்று கூறப்பட்டிருந்தது.
மத நிறுவனங்கள், அறக்கட்டளைகள்
தற்போதைய லோக்பால் மசோதாவின்படி பொதுமக்களிடம் நிதி சேகரிக்கும், வெளிநாட்டில் இருந்து நிதி பெறும் அனைத்து நிறுவனங்கள், அறக்கட்டளைகள் உள்ளடங்கும். ஆனால் முந்தைய மசோதாவிலோ, இதற்கு சில வரம்புகள் உருவாக்கப்பட்டிருந்தன.
விசாரணை முறை
தற்போதைய லோக்பால் மசோதாவின்படி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது, விசாரணையை லோக்பால் அமைப்பே மேற்கொள்ளலாம் அல்லது சம்பந்தப்பட்ட விசாரணை அமைப்பு மேற்கொள்ளவும் சொல்லலாம்.
ஆனால் முந்தைய மசோதாவில் சம்பந்தப்பட்ட அமைப்புதான் விசாரணை நடத்த முடியும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
சிபிஐ விசாரணை
புதிய மசோதாவின் படி தனியான விசாரணை ஆணையம் அமைக்க வழிசெய்கிறது. இதன் தலைவரை ஊழல் தடுப்பு ஆணையர் பரிந்துரைப்பார். லோக்பால் பரிந்துரைக்கும் வழக்குகளை விசாரிக்கும் சிபிஐ அதிகாரிகளை, லோக்பால் ஒப்புதலுடனேயே மாற்ற வேண்டும்.
பிரதமர்
பிரதமர் மீதான புகார்கள் லோக்பால் வரம்புக்குள் கொண்டுவரப்படுகின்றன.
விசாரணை
லோக்பால் அமைப்பு தமது விசாரணையை 60 நாட்களுக்குள் முடிவு செய்வதுடன், புலனாய்வை 6 மாதங்களுக்கும் நிறைவு செய்ய வேண்டும். பிரதமருக்கு எதிரான விசாரணை ரகசியமாக நடத்தப்பட்டு லோக்பால் பெஞ்சின் மூன்றில் 2 பங்கு உறுப்பினர்களின் ஒப்புதல் பெறப்பட வேண்டும்.
தண்டனை
பொதுத் துறை பணியாளர்களுக்கு 7 ஆண்டுகாலம் வரை சிறைத் தண்டனை விதிக்கலாம். குற்றவியல் நடவடிக்கை மற்றும் ஊழல் புகாரில் சிக்கியோருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கலாம்.