இன்போசிஸ் நிறுவனத்தின் சிஇஓவாக பதவியேற்றார் சலில் பாரேக்!
இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக அதிகாரியாக சலில் பாரேக் நேற்று பதவியேற்றார்.
பெங்களூரு : இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும், நிர்வாக இயக்குநராகவும் பதவி ஏற்றுக்கொண்டு இருக்கிறார் சலில் பரோக்.
பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு கடந்த 36 வருடங்களாக இந்திய மென்பொருள் துறையில் ஜாம்பவானாக இயங்கி வருகிறது இன்போசிஸ் நிறுவனம். இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக விஷால் சிக்கா பணியாற்றி வந்தார்.
இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான நாராயண மூர்த்தி விஷால் சிக்கா மீது தொடர்ந்து நிர்வாக குற்றச்சாட்டுகளை வைத்ததை அடுத்து விஷால் சிக்கா அப்பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். இதனையடுத்து அந்நிறுவனத்திற்கான தலைமை செயல் அதிகாரி பணிக்கு சரியான ஆளை தேடும் சவால் நிர்வாக குழுவிற்கு எழுந்தது.
இந்நிலையில், சலில் பாரேக்கிற்கு அந்த வாய்ப்பு கிடைத்து உள்ளது. 53 வயதான சலில் ஐ.ஐ.டி.,யில் விமானப் பொறியியல் படித்து, கார்ன்வெல் பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் மற்றும் கம்யூட்டர் சயின்ஸ் பிரிவில் முதுகலைப்பட்டம் பெற்றவர்.
கடந்த 2000ம் ஆண்டு கேப்ஜெமினியில் முழு நேர ஊழியனாக பணியேற்ற அவர், அந்நிறுவனத்தின் கிளவுண்ட் கம்யூட்டிங் துறையில் அதிக வாடிக்கையாளர்களை ஈர்த்து அந்நிறுவனத்திற்கு மிகப்பெரிய லாபத்தை ஈட்டிக்கொடுத்தார். சுமார் 17 வருடங்களான அந்நிறுவனத்தில் பணியாற்றிய அவருக்கு இன்போசிஸ் நிறுவனம் அழைப்பு விடுத்தது.
இதனையடுத்து இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பையும், நிர்வாக இயக்குநர் பொறுப்பையும் சலில் பாரேக் ஏற்றுக்கொண்டு உள்ளார். இவரை நேற்று நடந்த விழாவில், ஊழியர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார் இன்போசிஸ் நிறுவனத்தின் மற்றொரு நிறுவனர் நந்தன் நீல்கேனி.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பணியாற்றிய அனுபவம், இந்திய மென்பொருள் துறை பற்றிய தெளிவு, வாடிக்கையாளர்களின் தேவை உள்ளிட்ட பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் இருப்பதால் நிச்சயம் சலில் சிறப்பாக செயல்படுவார் என்று நந்தன் நீல்கேனி தெரிவித்து உள்ளார்.
விழாவில் பேசிய சலில் பாரேக், ஐ.டி பணியாளர்கள் புதுப்புது தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்ட வேண்டும். அந்த ஆர்வம் தான் அவர்களை இந்த துறையில் நிலைத்து செயல்பட வைக்கும் என்று குறிப்பிட்டு உள்ளார்.