13 ஆண்டுகளாக நடந்த கார் விபத்து வழக்கில் இருந்து சல்மான் கானை விடுவித்த மும்பை ஹைகோர்ட்
மும்பை: 2002ம் ஆண்டு மும்பை பந்த்ரா பகுதியில் குடிபோதையில் கார் ஓட்டி சாலையோரம் படுத்திருந்தவர்கள் மீது ஏற்றி ஒருவரை கொன்ற வழக்கில் இருந்து பாலிவுட் நடிகர் சல்மான் கான் விடுவிக்கப்பட்டுள்ளார்.
2002ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ம் தேதி இரவு பாலிவுட் நடிகர் சல்மான் கான் குடிபோதையில் கார் ஓட்டி மும்பை பந்த்ரா பகுதியில் சாலையோரம் படுத்திருந்தவர்கள் மீது ஏற்றியதில் ஒருவர் பலியானார், 4 பேர் காயம் அடைந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த மும்பை செஷன்ஸ் நீதிமன்றம் கடந்த மே மாதம் சல்மான் கானுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.
உயர் நீதிமன்றம்
செஷன்ஸ் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சல்மான் கான் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை விசாரித்த நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது.
ஆதாரங்கள்
சல்மானுக்கு எதிராக அரசு தரப்பில் அளிக்கப்பட்ட ஆதாரங்கள் ஏற்றுக் கொள்ளும்படி இல்லை. சந்தேகத்தின்பேரில் அவருக்கு தண்டனை அளிக்க முடியாது. இந்த வழக்கில் முக்கிய சாட்சியான ரவீந்திர பாட்டிலின் வாக்குமூலம் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை என்று நீதிபதி ஏ.ஆர். ஜோஷி தெரிவித்துள்ளார்.
விடுவிப்பு
சல்மான் கான் குடிபோதையில் காரை ஏற்றி ஒருவரை கொலை செய்ததற்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி இந்த வழக்கில் இருந்து அவரை விடுவித்து தீர்ப்பு அளித்துள்ளார் நீதிபதி ஜோஷி.
நிம்மதி
13 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் சல்மான் கானுக்கு இன்று நிம்மதி கிடைத்துள்ளது. இந்த தீர்ப்பால் அவரது குடும்பத்தாரும் நிம்மதி அடைந்துள்ளனர்.
அப்போ?
சல்மான் கான் வழக்கில் இத்தனை ஆண்டுகளாக அமைதியாக இருந்த அவரது டிரைவர் அசோக் சிங் கடந்த ஏப்ரல் மாதம் நீதிமன்றத்தில் ஆஜராகி தான் தான் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக வாக்குமூலம் அளித்தார். சல்மான் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் அசோக் சிங் சிக்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.