நாளை தப்புவாரா சல்மான்...? ரூ 200 கோடி முதலீடு செய்தவர்கள் 'பக் பக்' காத்திருப்பு!
மும்பை: சல்மான்கான் போதையில் கார் ஓட்டி ஒருவரைக் கொன்ற வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாகும் நிலையில், அவரை நம்பி சினிமாவில் ரூ.200 கோடி முதலீடு செய்துள்ள தயாரிப்பாளர்கள் பதட்டத்துடன் காத்திருக்கின்றனர்.
இந்தி நடிகர் சல்மான்கான் கடந்த 2002-ம் ஆண்டு செப்டம்பர் 28-ந் தேதி நள்ளிரவு மும்பை பாந்திராவில் மதுபோதையில் வேகமாக கார் ஓட்டி சென்று விபத்து ஏற்படுத்தியதாக போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
12 ஆண்டுகளாக இந்த வழக்கு நடந்து வருகிறது. இந்த குற்றச்சாட்டில் அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கில் நாளை (6-ந் தேதி) தீர்ப்பு வெளியாகிறது.
இந்த நிலையில் சல்மான்கானை நம்பி ரூ 200 கோடி வரை தயாரிப்பாளர்கள் முதலீடு செய்துள்ளனர்.
சல்மான்கான், நடிகை கரீனா கபூர் ஜோடி சேர்ந்துள்ள ‘பஜ்ரங்கி பாய்ஜான்' என்ற படமும், சோனம் கபூருடன் இணைந்து நடித்துள்ள ‘பிரேம் ரத்தான் தான் பாயோ' என்ற திரைப்படமும் இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளன.
இது தவிர, ‘தாபங்-3' மற்றும் ‘என்ட்ரி மெய்ன் நோ என்ட்ரி' உள்ளிட்ட மேலும் 4 படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார்.
இந்த வழக்கில் அவருக்கு ஒன்றும் நேராது என்ற நம்பிக்கை இருப்பதாக, சல்மானின் தயாரிப்பாளர்கள் சொன்னாலும், உள்ளுக்குள் பயத்துடனே நாளைய தீர்ப்பை எதிர்நோக்குகின்றனர்.
இன்னொரு பக்கம், ராஜஸ்தானின் அரிய வகை மான்களை வேட்டையாடி வழக்கும் தீவிரமடைந்துள்ளது. இந்த வழக்கிலும் அவருக்கு சிறைத் தண்டனை காத்திருக்கிறது.