ஆமா.. சி.ஏ.ஏ.வை நடைமுறைப்படுத்த முடியாது என மாநிலங்கள் சொல்ல முடியாது... சல்மான் குர்ஷித்தும் ஆதரவு
டெல்லி: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்தை (சி.ஏ.ஏ.) நடைமுறைப்படுத்த முடியாது என மாநிலங்கள் கூற முடியாது என காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபல் தெரிவித்துள்ளதற்கு மற்றொரு மூத்த காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித் ஆதரவு தெரிவித்துள்ளார்.
சி.ஏ.ஏ.வுக்கு எதிராக கேரளா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் உச்சநீதிமன்றத்திலும் கேரளா அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.
இதேபோல் பஞ்சாப்பில் காங்கிரஸ் அரசும் சட்டசபையில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. மேலும் கேரளாவைப் போல உச்சநீதிமன்றத்தில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக வழக்கு தொடரப்படும் என்று பஞ்சாப் முதல்வர் அமரீந்தர்சிங் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் கேரளாவின் கோழிக்கோட்டில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மூத்த காங்கிரஸ் தலைவர் கபில்சிபல் பேசியதாவது:
Recommended Video
சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.பி.ஆர். மீது அதிருப்தி இருந்தால் மத்திய அரசுக்கு மாநில அரசுகள் தெரியப்படுத்தலாம். இதில் என்.ஆர்.சி. என்பது மாநில அரசு அதிகாரிகளால் செயல்படுத்தக் கூடியது.
மாநில அரசு அதிகாரிகளை மத்திய அரசுடன் இணைந்து செயல்படக் கூடாது என சொல்வது சாத்தியம் அல்லாதது. அதேபோல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்தை அமல்படுத்த முடியாது என மாநிலங்கள் அவ்வளவு எளிதாக சொல்லவும் முடியாது.
சி.ஏ.ஏ.வை எதிர்த்து மாநில அரசுகள் சட்டசபைகளில் தீர்மானம் நிறைவேற்ற உரிமை உண்டு. ஆனால் நடைமுறைப்படுத்த முடியாது என கூற இயலாது. இவ்வாறு கபில்சிபல் கூறியுள்ளார்.
இதனிடையே கபில்சிபலின் கருத்துக்கு மூத்த காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித்தும் ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், இவ்விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிடாதவரை சட்டத்தை மதித்துதான் நடப்பதைத் தவிர வேறு வழி இல்லை. இல்லையெனில் மாநில அரசுகள் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என கூறியுள்ளார்.