காத்திருக்கச் சொன்னது குத்தமா?.. சலூன் கடைக்காரரை சுட்டுக்கொன்ற இளைஞர்
புலந்த்சாகர் : உத்தரபிரதேசத்தில் ஷேவிங் செய்துகொள்ள வந்தவரை சிறிது நேரம் காத்திருக்கச் சொன்னதால், அந்த இளைஞர் சலூன் கடைக்காரரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டார்.
உத்தர பிரதேசத்தில் மாநிலம் தாகர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஷாருக். இவர் அதே கிராமத்தில் சலூன் கடை நடத்தி வந்தார். இதே பகுதியைச் சேர்ந்த 25 வயதான சலீம் என்ற இளைஞர் ஷாருக் கடைக்கு வந்தார்.
அப்போது கடையில் சிலபேர் இருந்தார்கள். சலீம் வந்தவுடன் தனக்கு முதலில் ஷேவிங் செய்ய கேட்டுக்கொண்டார். ஆனால் ஷாருக், ஏற்கனவே ஆள் இருப்பதால் அவர்களுக்குப்பின் ஷேவிங் செய்கிறேன் என்றார்.
காத்திருக்கச் சொன்னதையடுத்து, கோபம் அடைந்த சலீம், தான் வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியால் சலூன் கடைக்காரரை சுட்டார். துப்பாக்கி சூட்டில் குண்டு பாய்ந்த ஷாருக் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.
இதையடுத்து அங்கிருந்தவர்கன் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், கொண்டு செல்லும் வழியிலேயே ஷாருக் உயிரிழந்தார்.
ஷாரூக்கின் தந்தை கொடுத்த புகாரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சலீமின் நண்பர்கள் இருவரை கைது செய்துள்ளனர். ஆனால் சலீம் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஷேவிங் செய்வதற்கு சற்று நேரம் காத்திருக்க முடியாமல் சலூன் கடைக்காரரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.