உப்புப் பஞ்சம் வரப்போகுது… வதந்தியால் பிகாரில் கிலோ உப்பு ரூ.150க்கு விற்பனை
பாட்னா: உப்பு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பரவிய வதந்தியை தொடர்ந்து பீகாரில் வியாபாரிகள் ஒரு கிலோ உப்பை 100 ரூபாய்க்கு விற்பனை செய்தனர். பொதுமக்களும் அலறி அடித்தபடி உப்பை போட்டிப்போட்டுக்கு கொண்டு வாங்கிச் சென்றனர்.
நாடு முழுவதும் காய்கறி உள்பட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. வெங்காயம் கிலோ 80 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் தக்காளியும் 50 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது.
அரிசி விலை கிலோ ரூ.55க்கும், பருப்பின் விலை ரூ.100ஆகவும் உயர்ந்துள்ளது. இந்த நிலை ரூ.15க்கு விற்பனை செய்யப்படும் ஒரு கிலோ உப்பின் விலை ரூ.100 ஆக உயர்ந்துள்ளது.
உப்பு கிலோ ரூ.100
பீகாரிலும் அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாக வதந்தி பரவியது. அதுவும் உப்புக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாக வதந்தி பரவியதைத் தொடர்ந்து பொதுமக்கள் கிலோ 100 ரூபாய்க்கு வாங்கிச் சென்றனர்.
இதனை பயன்படுத்தி வியாபாரிகள் அதிக லாபம் ஈட்டினர். தர்பங்கா, மதுபானி, சமஸ்திபூர், ஆகிய மாவட்டங்களில் ரூ.100 முதல் 125 ரூபாய்க்கு உப்பு விற்கப்பட்டது. சில மாவட்டங்களில் கிலோ.ரூ.150 வரை விற்று லாபம் ஈட்டினர் வியாபாரிகள்.
நிதிஷ் குற்றச்சாட்டு
இதைத் தொடர்ந்து, பொருட்களை அதிக விலைக்கு விற்கும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் நிதிஷ்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த வதந்திக்கு மாநில பா.ஜ.க.வே காரணம் என்று நிதிஷ்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
ஒடிஷாவில் தட்டுப்பாடு
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்தில் அத்தியாவசிய பொருட்களான அரிசி, காய்கறிகள், மளிகை பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனை பயன்படுத்திக் கொண்ட வியாபாரிகள் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தனர். அதனையும் பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு வாங்கிச் சென்றனர். உருளைக்கிழங்கின் விலை உயர்ந்துள்ளது.
ஒடிஷாவில் உப்பு
இதனிடையே, அத்தியாவசிய பொருட்களை கொள்ளை விலைக்கு விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில அரசு எச்சரிக்கை விடுத்தது. இதைத் தொடர்ந்து பொருட்கள் தட்டுப்பாடுயின்றி கிடைத்தது.
எனினும் ஒடிஷா மாநிலத்தில் கடந்த வாரம் ஒருகிலோ உப்பு 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது நினைவிருக்கலாம்.