ராஜ்யசபா தேர்தல் 2018: உ.பி.யில் மாயாவதி வேட்பாளரை வெல்ல வைப்பாரா அகிலேஷ் யாதவ்?
உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெறும் ராஜ்யசபா தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளருக்கு தனது ஆதரவு அளித்து மாயாவதியின் முகத்தில் புன்னகை பூக்கச் செய்துள்ளார் அகிலேஷ் யாதவ்.
Recommended Video
லக்னோ: பரபரப்பான சூழ்நிலையில் ராஜ்யசபா தேர்தல் இன்று நடைபெறுகிறது. சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் விருந்து கொடுத்து தனது ஆதரவை மாயாவதிக்கு உறுதிபடுத்தியுள்ளார். காங்கிரஸ் கட்சி ஆதரவும் இருப்பதால் தனது வேட்பாளரை எம்பியாக வெற்றி பெற வைத்து விடலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் மாயாவதி.
245 உறுப்பினர்களை கொண்ட ராஜ்யசபாவில், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 83 உறுப்பினர் பலம் உள்ளது. அதில் பாஜகவுக்கு மட்டும் இருப்பது உறுப்பினர்கள் 58 மட்டுமே. 16 மாநிலங்களில் காலியாகும் 58 ராஜ்யசபா உறுப்பினர்களுக்கான தேர்தல் இன்று நடக்கிறது. இதில் அதிக இடங்களில் வெற்றி பெற்று ராஜ்யசபாவில் தனது உறுப்பினர்களின் பலத்தை அதிகரிக்க நினைக்கிறது பாஜக
மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து 10 எம்பிக்கள் தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள். இதில் பாஜக 8 இடங்களிலும், சமாஜ்வாடி ஒரு இடத்திலும் வெற்றி பெறும். ஒரு இடத்துக்கு பலத்த போட்டி நிலவுகிறது.
உத்தரபிரதேசத்தில் மொத்தம் 403 எம்எல்ஏக்கள் உள்ளனர். ஒரு வேட்பாளர் வெற்றி பெற 37 எம்.எல்.ஏ.க்.களின் வாக்குகள் தேவை. பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு 324 பேர் உள்ளனர். சமாஜ்வாடி கட்சிக்கு 47 எம்எல்ஏக்கள் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 19, காங்கிரசுக்கு 7, ராஷ்ட்டீரிய லோக்தளத்துக்கு 1, எம்எல்ஏவும் உள்ளனர்.
ஜெயா பச்சன்
சமாஜ்வாடி கட்சி ஜெயா பச்சனை வேட்பாளராக நிறுத்தி உள்ளது. சமாஜ்வாடி கட்சியில் வாய்ப்பு கொடுக்காததால் அந்த கட்சியை சேர்ந்த நரேஷ் அகர்வால் அங்கு இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார். பாஜக சார்பில் அவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் பீமராவ் அம்பேத்கர் நிறுத்தப்பட்டு உள்ளார்.
ஆதரவை உறுதி செய்த அகிலேஷ்
இந்த நிலையில் தங்கள் வேட்பாளருக்கு ஆதரவு அளிக்குமாறு சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவிடம் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கேட்டிருக்கிறார். சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா இடைத்தேர்தலில் தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு அளித்து வெற்றி பெற வைத்த மாயாவதிக்கு விருந்து கொடுத்து தனது ஆதரவை உறுதி செய்துள்ளார் அகிலேஷ் யாதவ். இந்த விருந்தில் சுயேச்சை வேட்பாளர் குண்ட்லாவும் பங்கேற்றது மாயாவதியின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது.
1 எம்எல்ஏ தேவை
தங்கள் கட்சியில் கூடுதலாக இருக்கும் 10 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை மாயாவதி வேட்பாளருக்கு அளிக்கிறார் அகிலேஷ். ஏற்கனவே காங்கிரசின் 7 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு பகுஜன் சமாஜ் கட்சிக்கு உள்ளது. இதனை சேர்த்தால் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளருக்கு 36 பேரின் ஆதரவு இருக்கிறது. இன்னும் தேவையான ஒரு வாக்கை ராஷ்ட்டீரிய லோக்தளம் அல்லது சுயேச்சையிடம் எளிதாக பெற்று விடலாம் என்ற நம்பிக்கையில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் இருக்கிறார். மாயாவதியும் தனது கட்சி வேட்பாளரை வெற்றி பெற வைத்து ராஜ்யசபாவிற்குள் அனுப்பிவிடலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.
மகனை நம்பும் அப்பா
அதே நேரத்தில் சமாஜ்வாடி கட்சி எம்எல்ஏக்களின் ஓட்டுகள் கட்சி மாறி தனக்கு விழ வாய்ப்புள்ளது என்று பாஜக வேட்பாளர் நரேஷ் அகர்வால் நம்பிக்கையில் உள்ளார். அவரது மகன் நிதின் சமாஜ்வாடி கட்சி எம்எல்ஏவாக உள்ளார். அவரது தலைமையில் சில எம்எல்ஏக்கள் கட்சி மாறி ஓட்டு போட்டால் ஜெயா பச்சனுக்கோ அல்லது மாயாவதி வேட்பாளருக்கோ பாதிப்பு ஏற்படும்.
பாஜகவிற்கு பெரும்பான்மையில்லை
உத்தரபிரதேசத்தில் இருந்து மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி உட்பட 8 பேர் எளிதாக வென்றுள்ளனர். ராஜ்யசபாவில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில், இன்றைய தேர்தல்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. ராஜ்யசபா தேர்தல் முடிவை பொறுத்தே சமாஜ்வாடி- பகுஜன் சமாஜ் கட்சிகள் எதிர்காலத்தில் லோக்சபா தேர்தலில் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.