2017 உ.பி சட்டசபை தேர்தலுக்கு முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு சமாஜ்வாடி அதிரடி!
லக்னோ: 2017-ம் ஆண்டு நடைபெறும் உத்தரபிரதேச சட்டசபை தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை அதிரடியாக வெளியிட்டுள்ளது ஆளும் சமாஜ்வாடி கட்சி.
தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல்கள் மே 16-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலையே கட்சிகள் இன்னமும் வெளியிடவில்லை.
ஆனால் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறப் போகும் உத்தரப்பிரதேச மாநில சட்டசபை தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை தற்போதே வெளியிட்டு அசத்தியுள்ளது சமாஜ்வாடி கட்சி.
முலாயம்சிங் யாதவின் மகன் அகிலேஷ்சிங் யாதவ் உத்தரப்பிரதேச முதல்வராக இருக்கிறார். இவரது ஆட்சிக் காலம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முடிவடைய உள்ளது.
உ.பி.யில் மொத்தம் 402 தொகுதிகள் உள்ளன. இதில் 142 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை சமாஜ்வாடி கட்சியின் பொதுச்செயலாளர் ராம்கோபால் யாதவ் நேற்று வெளியிட்டார்.
இந்த வேட்பாளர்களில் புதியவர்கள் குறைவு என்றாலும் கடந்த தேர்தலில் 2-வது மற்றும் 3-வது இடம் பெற்றவர்களுக்கு அதிகமான வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இந்த 142 பேரில் அதிகமாக 26 முஸ்லிம்கள், 18 யாதவர் மற்றும் 12 பெண்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். முஸ்லிம்களில் முக்கிய வேட்பாளர்களாக பீஸ் பார்ட்டி எனப்படும் அமைதி கட்சியின் தலைவர் அனிஸுர்ராம், டெல்லியின் ஜாமியா மசூதி ஷாஹி இமாமான அகமது புகாரியின் மருமகனான உமர் அலிகான் ஆகியோர் பெயர் இடம் பெற்றுள்ளன.
சமாஜ்வாதியின் வேட்பாளர்கள் வெற்றிக்காக அமெரிக்காவை சேர்ந்த தேர்தல் ஆலோசனை நிறுவனத்துடன் ஒப்பந்தம் இடப்பட்டுள்ளது. இவர்கள் தம் எம்.எல்.ஏக்கள் மற்றும் கடந்த தேர்தலில் தோல்வி அடைந்தவர்களை பற்றி அலசி ஆராய்ந்து அளித்த அறிக்கையின் பேரில் வேட்பாளர்களை நிறுத்துகிறது சமாஜ்வாடி கட்சி.