பிஜேபியோட 'ஐட்டம் கேர்ள்' நான்.. அரசியல் தலைவரின் அதிரிபுதிரி பேச்சு
பாஜகவின் ஐட்டம் கேர்ள் அதாவது குத்தாட்ட நடிகை தான், தான் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அசாம்கான் நக்கலடித்துள்ளார்.
டெல்லி : நான் பாஜகவின் குத்தாட்ட நடிகை என்பதால் அவர்கள் எப்போதும் என்னைப் பற்றியே தான் பேசிக் கொண்டிருப்பார்கள் என்று சமாஜ்வாதிக் கட்சித் தலைவர்களில் ஒருவரான அசாம் கான் கூறியுள்ளார்.
சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவிப்பதென்றால் சமாஜ்வாதிக் கட்சியின் மூத்தத் தலைவர் அசாம் கானுக்கு வழக்கமான ஒன்று தான். இந்த சர்ச்சையில் நாயகன் இந்திய ராணுவத்தினர் குறித்த தெரிவித்த ஒரு அவதூறு குற்றச்சாட்டால் அவருக்கு அனைத்து தரப்பினர் மத்தியிலும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ராம்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய அசாம் கான், எல்லையில் ஒரு புறம் சண்டை நடந்து கொண்டிருக்கிறது, மற்றொரு புறம் ராணுவ வீரர்கள் ஆயுதம் தாங்கிய பெண்களால் தாக்கப்படுகின்றனர். இந்த செயலுக்கு பின்னால் இருக்கும் அர்த்தத்தை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
நாட்டிற்கே அவமானம்
ராணுவ வீரர்களைக் கொல்வதோடு அவர்களுடைய அந்தரங்க உறுப்பும் துண்டிக்கப்படுகிறது. எல்லையில் நடக்கும் இந்த கூத்தால் நாடே அவமானம் கொள்ள வேண்டும். இந்தியா எப்படி உலக நாடுகளை இப்போது எதிர்க்கொள்ள போகிறது?" என பேசியிருந்தார். அவருடைய இந்த பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது.
இது தான் பேச்சுரிமையா
அசாம் கான் பயங்கரவாதத்தை ஆதரிக்கிறார் என பாஜக கடுமையாக சாடியது. அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா, "அசாம் கானுக்கு கஷ்டமாக இருந்தால், இப்போதே அவர் பாகிஸ்தானுக்கு சென்றுவிடலாம். பேச்சுரிமை என்ற பெயரில் இந்திய ராணுவ வீரர்கள் பற்றி அவதூறு பரப்பி வருகிறார் அசாம் கான், அவரை உடனடியாக கட்சியை விட்டு விலக்க வேண்டும்" என்றும் வலியுறுத்தியுள்ளார்.
பல்ட்டி
இதனையடுத்து தன்னுடைய கருத்தானது மீடியாக்களால் திரிக்கப்பட்டு உள்ளது என அசாம் கான் குற்றம் சாட்டிஉள்ளார். இந்திய குடிமகனாக இருந்து கொண்டு நான் நம்முடைய ராணுவ வீரர்கள் பற்றி அப்படிக் கூறுவேனா என்று அந்தர் பல்ட்டி அடித்துள்ளார் அசாம் கான்.
ஐட்டம் கேர்ள்
மேலும் பாஜகவின் விருப்பமான குத்தாட்ட நடிகை நான்தான், அவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை என்றால் என்னை பற்றிதான் பேசுவார்கள். என்னுடைய கருத்தினால் ராணுவத்தின் உறுதியானது எப்படி குறையும்? பிரதமர் மோடி பாகிஸ்தானுக்கு பயணம் செய்த போதுதான் ராணுவத்தின் மன உறுதியானது விழுந்தது என மீண்டும் வம்புக்கு இழுத்துள்ளார் அசாம் கான்.