காங். கட்சியின் தலைவரும் நாட்டின் பிரதமரும் ஒரே நபராக இருக்க வேண்டும்: ப. சிதம்பரம்
டெல்லி: நாட்டின் பிரதமரும் கட்சி தலைவரும் ஒரே நபராக இருந்தால் நன்றாக இருக்கும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் நிதி அமைச்சருமான ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
என்.டி.டி.வி. தொலைக்காட்சிக்கு ப. சிதம்பரம் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
சாதாரணமாக கட்சியின் தலைவரும் பிரதமரும் ஒரே நபராகத்தான் இருக்கின்றனர். இது நம் தற்போது வாழும் முறை சார்ந்தது. கட்சியின் தலைவரும் பிரதமரும் ஒரே நபராக இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
சஞ்சஜ் பாரு புகார் அபத்தம்
பிரதமர் மன்மோகன் சிங் செயல்படாத பிரதமராக இருந்தார் என்று பிரதமரின் முன்னாள் ஊடக ஆலோசகர் சஞ்ஜய் பாருவின் குற்றச்சாட்டு அபத்தமானது.
ஹிட்லர், முசோலினி தேவை இல்லை
பாஜகவின் பிரதமர் வேட்பாளர் தம்மை வலிமையான நபராக முன்னிறுத்துகிறார். நாட்டுக்கு இப்போது தேவை ஹிட்லர், முசோலின் போன்ற வலிமையான நபர்கள் அல்ல. அனைத்து தரப்பு மக்களும் ஏற்கக் கூடிய ஒருவர்தான் தேவை.
ஏன் வதேரா மீது விசாரணை?
ராபர் வதேரா- டி.எல்.எப் நிறுவனத்துக்கு இடையேயான வர்த்தக உறவு தனிநபர் சார்ந்தது. அது தொடர்பாக எந்த ஒரு புகாரும் இல்லை.. விசாரணையும் இல்லை. அப்படியான நிலையில் அரசு ஏன் விசாரணை நடத்த வேண்டும்.
ஆவரேஜ் மாநில முதல்வர் மோடி
மோடியைப் பொறுத்தவரை அவர் ஒரு சராசரி வளர்ச்சி கொண்ட ஒரு மாநிலத்தின் முதல்வர் என்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. தற்போதைய லோக்சபா தேர்தல் முடிவுகள் ஆச்சரியமளிக்கக் கூடியதாக இருக்கும்.
ராகுலை பிரதமர் வேட்பாளராக்கனும்
ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் அறிவிக்க வேண்டும். பிரியங்காவைப் பொறுத்தவரையில் அரசியலில் இன்னும் அதிகம் ஈடுபட வேண்டும். ஆனால் அது குறித்து அவர்தான் முடிவு செய்ய வேண்டும். காங்கிரஸ் கட்சி அவருக்கு அழுத்தம் கொடுக்காது.
குஜராத்தில் இளம்பெண் வேவு பார்க்கப்பட்ட விவகாரத்தில் உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியை கொண்டு விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது. இருப்பினும் இதுவரை நீதிபதி நியமிக்கப்படவில்லைதான்..
இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.