சம்ஜாதா எக்ஸ்பிரஸ் ரயிலை திடீரென ரத்து செய்த பாகிஸ்தான்.. எல்லையில் பயணிகள் அவதி
பாகிஸ்தானின் சம்ஜாதா எக்ஸ்பிரஸ் ரயில் திடீர் ரத்து செய்யப்பட்டுள்ளது.
லாகூர்: இந்தியாவுக்கான சம்ஜாதா எக்ஸ்பிரஸ் ரயிலை பாதியிலேயே ரத்து செய்து விட்டது பாகிஸ்தான். இதனால் அட்டாரி எல்லையுடன் ரயில் நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இரு நாட்டு உறவிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் இந்தியாவுக்கான விமான சேவையை பாகிஸ்தானும், பாகிஸ்தானுக்கான விமான சேவையை இந்தியாவும் நிறுத்தியுள்ளன. இந்த நிலையில் தற்போது சம்ஜாதா ரயில் மீது கை வைத்துள்ளது பாகிஸ்தான் அரசு. இந்தியா - பாகிஸ்தான் இடையிலான சம்ஜாதா எக்ஸ்பிரஸ் ரயிலை அது நிறுத்தி விட்டது.
பாகிஸ்தானின் லாகூர் மற்றும் அட்டாரி இடையிலான ரயில் இன்று ரத்து செய்யப்பட்டிருப்பதால் இந்தியாவுக்குள் வர முடியாமல் தவிக்கும் பயணிகளை பேருந்துகள் மூலம் அழைத்துச் செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது.
சம்ஜாதா என்ற பெயருக்கு உடன்பாடு என்று அர்த்தம். இது இந்தி வார்த்தையாகும். ஆறு ஸ்லீப்பர் கோச், ஒரு ஏசி 3 டயர் கோச்சுடன் கூடிய ரயில் இது. கடந்த 1976ம் ஆண்டு சிம்லா ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த ரயில் அறிமுகப்படுத்தப்பட்டு இயங்கி வந்தது. எப்போதெல்லாம் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் இந்த ரயில் சேவையும் நிறுத்தப்படுவது வழக்கமாகி விட்டது.