தாலி கட்டாமல் கெட்டிமேள இசைக்கு நடனமாடிய மணமகன்... திருமணத்தை நிறுத்திய பெண் வீட்டார்
மைசூர்: கர்நாடகாவில் மணமேடையில் தாலி கட்ட வேண்டிய மணமகன் கெட்டிமேள ஓசைக்கு எழுந்து நடனமாடியதால், அவரது நடத்தையில் சந்தேகமடைந்த மணமகளின் பெற்றோர் திருமணத்தை நிறுத்தினர்.
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் தாலுகா பன்னியனஉண்டி கிராமத்தை சேர்ந்தவர் மணமகளுக்கும், மைசூர் மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகா ஹீமாவு கிராமத்தை சேர்ந்த மணமகனுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பெரியோரால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இதையடுத்து நேற்று காலையில் பன்னியனஉண்டி கிராமத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற இருந்தது. மணமேடையில் மணமகள் வந்து அமர்ந்ததும் முகூர்த்த நேரம் வந்ததால் கெட்டிமேளம் வாசிக்கத் தொடங்கினர். அதுவரை அமைதியாக அமர்ந்திருந்த மணமகன், தாலியை மணமகள் கழுத்தில் கட்டுவதற்குப் பதிலாக திடீரென எழுந்து கூச்சலிட்டபடி நடனமாடத் தொடங்கியுள்ளார்.
இதனைக் கண்டு மணமகள் உட்பட திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக மணமகள் வீட்டார் மணமகனின் பெற்றோரிடம் விசாரித்துள்ளனர். இதனால் அங்கு வாக்குவாதம் உண்டானது.
மணமகள் வீட்டாருக்கு மணமகனின் மனநிலையில் சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து திருமணத்தை நிறுத்துவது என முடிவு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து திருமணத்திற்கு வந்திருந்த பன்னியனஉண்டி கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் மணமகளைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறினார். அதற்கு மணமகளின் பெற்றோரும் சம்மதம் தெரிவிக்கவே திருமணம் இனிதே நடைபெற்றது.
கெட்டிமேளம், நாதஸ்வர சத்தத்தை கேட்ட மணமகன் மணமேடையில் எழுந்து நின்று நடனம் ஆடி திருமணம் தடைப்பட்ட சம்பவம் சாம்ராஜ்நகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.