இந்தியாவையே பைக்கில் வலம் வந்த பெண் சாதனையாளர் சனா இக்பால் கார் விபத்தில் மரணம்!
தன்னம்பிக்கை பயிற்சியாளர் சனா இக்பால் ஹைதராபாத்தில் நேற்று நடந்த மோசமான கார் விபத்து ஒன்றில் மரணமடைந்தார்.
ஹைதராபாத்: தன்னம்பிக்கை பயிற்சியாளர் சனா இக்பால் ஹைதராபாத்தில் நேற்று நடந்த மோசமான கார் விபத்து ஒன்றில் மரணமடைந்தார்.
சனா இக்பால் தற்கொலைக்கு எதிராக நாடு முழுவதும் பயணம் செய்து பிரச்சாரம் செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் சனா இக்பால். இந்திய அளவில் பிரபலமான தன்னம்பிக்கை பயிற்சியாளரான இவர் தற்கொலைகளுக்கு எதிரானவர்.
நாடு முழுக்க பயணம்
இதையடுத்து நாடு முழுவதும் தற்கொலைக்கு எதிராக பிரச்சாரம் செய்து வந்தார். இதற்காக இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் பயணம் செய்ய முடிவு செய்திருந்தார். இதற்காக இவர் இந்தியா முழுவதும் மோட்டார் சைக்கிளிலேயே பயணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பல இடங்களுக்கு சென்று இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள் என பலரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார். இவர் சமயங்களில் அவரது கணவர் அப்துல் நதீம் உடன் பயணம் செய்வதையும் வழக்கமாக வைத்திருந்தார்.
காரில் பயணம்
இந்த நிலையில் நேற்று அதிகாலை சனா இக்பால் அவரது கணவர் அப்துல் நதீம் உடன் காரில் பயணித்துக் கொண்டிருந்தார். ஹைதராபாத் புறநகர் நரசிங்கி என்ற பகுதியில் இவர்கள் கார் சென்று கொண்டிருந்தது.
சாலை தடுப்பில் மோதியது
சனா இக்பாலின் கணவர் அப்துல் நதீம் காரை ஓட்டி சென்றார். இந்த நிலையில அவர்கள் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து லாங்கர் நெடுஞ்சாலை அருகே சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இடதுபுறம்தான் கார் மோதியது. அந்த பக்கம்தான் சனா அமர்ந்திருந்ததால் படுகாயமடைந்தார்.
கணவருக்கு சிகிச்சை
இந்த மோசமான விபத்து காரணமாக சனா இக்பால் சம்பவ இடத்திலேயே இறந்தார். அப்துல் நதீம் மோசமான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்றுவருகிறார். இதுகுறித்து தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.