20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்... உரிய பதில் அளிக்க ஆந்திர அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு
திருப்பதி: திருப்பதி வனப்பகுதியில் தமிழக தொழிலாளர்கள் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு உரிய பதில் அளிக்குமாறு ஆந்திர அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பதி வனப்பகுதியில் நேற்று முன்தினம் செம்மரக்கட்டைகளைக் கடத்தியதாக 20 தமிழக தொழிலாளர்கள் ஆந்திர போலீசாரால் சுட்டுக் கொல்லப் பட்டனர். இது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட படுகொலை எனக் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என சிவில் லிபர்டி கமிட்டி என்ற அமைப்பு ஆந்திர உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. அந்த மனுவை தலைமை நீதிபதி கல்யாண்சிங் குப்தா,சஞ்சய்குமார் ஆகியோர் அடங்கி முதன்மை அமர்வு விசாரித்தது.
அப்போது சிவில் லிபர்டி கமிட்டி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கிராந்திசைந்தனியா, கொல்லப்பட்டவர்களின் உடல்களை பெற்றுக்கொள்ள ஆந்திர காவல் துறை காலக்கெடு விதித்திருப்பதாக கூறினார்.
இந்த வழக்கை உள்ளூர் காவல் துறை விசாரித்தால் உண்மை நிலை தெரியவராது என்றும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கிராந்திசைந்தனியா வாதாடினார்.
இதனை அடுத்து சுட்டுக்கொல்லப்பட்டவர்களின் உடல்களை உறவினர்களிடம் தான் ஒப்படைக்க வேண்டும் என்றும் உறவினர்கள் பெற்றுக்கொள்ளும் வரை உடல்களை அரசு மருத்துவமனையில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், இது தொடர்பாக நாளைக்குள் ஆந்திர தலைமைச் செயலாளர்,ஆந்திர டிஜிபி,சிறப்பு அதிரடிப் படை தலைவர் ஆகியோர் பதில் அளிக்க வேண்டும் என்று கூறி வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.