என்ன சாதனை செய்தாலும் பெண் என்றால் ‘அதை’ப் பற்றி தான் கேட்பீர்களா... செய்தியாளரிடம் சீறிய சானியா!
டெல்லி: எந்தத் துறையில் என்ன சாதனைகள் செய்திருந்தாலும், பெண்களிடம் கேட்கப்படும் முதல் கேள்வி அவர்களது திருமணம், குழந்தைப் பேறு போன்றவை தானா என செய்தியாளரின் கேள்வி ஒன்றிற்கு நச்சென்று பதிலளித்துள்ளார் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா.
மகளிர் இரட்டையர் டென்னிஸ் தரவரிசையில் முன்னணியில் உள்ள இந்திய நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தன் சுயசரிதையை ‘ஏஸ் அகைன்ஸ்ட் தி ஆட்ஸ்' என்ற பெயரில் வெளியிட்டுள்ளார்.
இதில் தனது வாழ்வில் 5 வயதிலிருந்து நடந்த நிகழ்வுகள், டென்னிஸ் வாழ்க்கையில் தான்பட்ட கஷ்டங்கள், உலக மகளிர் இரட்டையர் டென்னிஸ் தர வரிசையில் முதலிடம் பிடித்தது எப்படி என்பது போன்ற தகவல்களை 40 அத்தியாயங்களாக எழுதியுள்ளார்.
பேட்டி...
தற்போது இப்புத்தகம் தொடர்பான புரோமோஷன் வேலைகளில் பிசியாக உள்ளார் சானியா. இந்நிலையில், இது தொடர்பாக ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்தார் அவர். அப்போது, அவரை பேட்டி கண்ட ராஜ்தீப் என்ற செய்தியாளர், ‘உங்களது புத்தகத்தில் குழந்தைகள் பெற்றுக் கொள்வது, குடும்பமாக செட்டில் ஆவது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லையே?' என கேள்வி எழுப்பினார்.
இது தான் செட்டிலா?
இதைக் கேட்டு ஆவேசமான சானியா, ‘ஏன் இப்போது நான் செட்டில் ஆகவில்லையா? ஒரு பெண் தன் வாழ்நாளில் எவ்வளவு சாதனைகள் செய்தாலும், இறுதியாக அவர் திருமணம், குழந்தைப் பேறு போன்றவற்றால் தான் முழுமை அடைவதாக அர்த்தமா?
ஏன் இந்தக் கேள்விகள்...?
விம்பிள்டன் உட்பட பல்வேறு சாதனைகளைச் செய்தாலும் முதலில் திருமணம் பிறகு குழந்தை இவ்வாறு தான் ஊடகங்களின் கேள்விகள் இருக்கிறது. பெண்களைப் பார்த்தாலே ஏன் இது போன்ற கேள்விகளையே எழுப்புகிறீர்கள். ஆண் சாதனையாளர்களிடம் இது போல் கேட்பீர்களா? என சரமாரியாக பதில் கேள்விகளைத் தொடுத்தார்.
மன்னிப்பு...
சானியாவின் இந்த பதிலால் தனது தவறை உணர்ந்தார் ராஜ்தீப். உடனடியாக தனது செயலுக்கு அவர் மன்னிப்பும் கேட்டார். மேலும், ‘நிச்சயம் ஒரு ஆண் சாதனையாளரைப் பேட்டி கண்டிருந்தால் இந்தக் கேள்வியை நான் கேட்டிருக்க மாட்டேன். என் கண்ணோட்டத்தை மாற்றிக் கொள்கிறேன்' எனத் தெரிவித்தார்.
பாராட்டு...
ராஜ்தீப்பின் இந்த பதிலால் சமாதானம் ஆன சானியா, உடனடியாக மன்னிப்பு கேட்ட அவரது செய்கையைப் பாராட்டினார்.