தடுப்பூசி எடுத்துக் கொண்ட தூய்மை பணியாளர்... சில மணி நேரத்தில் உயிரிழப்பு... விசாரணைக்கு உத்தரவு
காந்திநகர்: குஜராத்தின் வதோதரா மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட தூய்மை பணியாளர் உயிரிழந்தது குறித்த விசாரணைக்குச் சுகாதார துறை உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளைக் கடந்த ஜனவரி 16ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இதற்காக சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக நாடு முழுவதும் உள்ள ஒரு கோடி சுகாதார ஊழியர்களுக்கும் இரண்டு கோடி முன்களப் பணியாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
தடுப்பூசி எடுத்துக்கொண்டவர் உயிரிழப்பு
இந்நிலையில், குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தில் தூய்மை பணியாளர் ஒருவர், கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட சில மணி நேரத்தில் உயிரிழந்தார், இது குறித்து விசாரணைக்கு மாநில சுகாதார துறை உத்தரவிட்டுள்ளது. உயிரிழந்த தூய்மை பணியாளர் வதோதரா நகராட்சியில் பணிபுரியும் ஜிக்னேஷ் சோலங்கி என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. தடுப்பூசி எடுத்துக்கொண்ட சில மணி நேரத்தில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டார்.
குடும்பத்தினர் குற்றச்சாட்டு
இது கறித்து ஜிக்னேஷ் சோலங்கியின் மனைவி திவ்யா கூறுகையில், "அவர் தடுப்பூசி எடுத்துக்கொள்ளப் போகிறார் என்று எங்களுக்குத் தெரியாது. இது குறித்து எங்களிடம் அவர் எதையும் சொல்லவில்லை. காலை தடுப்பூசி எடுத்துக்கொண்ட பின், வீட்டில் அவர் மகளுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென்று மயங்கி விழுந்தார்" என்றார். மேலும், தடுப்பூசியால் அவர் உயிரிழந்திருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மாரடைப்பே காரணம்
இது குறித்து எஸ்.எஸ்.ஜி மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ரஞ்சன் அய்யர் கூறுகையில், "கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட பின் அவரது உடல்நிலையை 1.5 மணி நேரம் கண்காணித்தோம். அதில் அவருக்கு எவ்வித மோசமான பக்கவிளைவும் ஏற்படவில்லை. இருப்பினும், சில மணி நேரத்தில் அவர் உயிரிழந்தார். அவர் மாரடைப்பால் உயிரிழந்திருக்கலாம் என்றே நாங்கள் கருதுகிறோம்" என்றார்
விசாரணை
மேலும், ஜிங்னேஷுக்கு கடந்த 1.5 ஆண்டுகளாகவே நெஞ்சு வலி இருந்ததாகக் குறிப்பிட்ட ரஞ்சன் அய்யர், இருப்பினும் அவர் மருந்துகளை எடுப்பதை நிறுத்தி விட்டார் என்றும் இதுவும் அவரது உயிரிழப்பிற்குக் காரணமாக இருக்கலாம் என்றும் தெரிவித்தார். நெஞ்சு வலி உள்ளிட்ட மருத்துவ பிரச்சனைகள் உள்ளவர்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று மத்திய அரசின் வழிகாடுட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஜிங்னேஷ் உயிரிழப்பு குறித்து தற்போது விசாரணை நடைபெற்றுவருவதாகவும் அவரது உடல் உடர்கூறாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் வதோதரா மாவட்ட தலைமை மருத்துவர் தேவேஷ் படேல் தெரிவித்தார்.