பத்மாவத் திரைப்படம் வெளியானால் தீபிகா படுகோனை உயிரோடு புதைப்போம்.. ராஜ்புத் தலைவர் எச்சரிக்கை!
பத்மாவத் திரைப்படம் வெளியானால் தீபிகா படுகோனை உயிரோடு புதைப்போம் என ராஜ்புத் அமைப்பின் தலைவர் தாகூர் அபிஷேக் சோம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
லக்னோ: பத்மாவத் திரைப்படம் வெளியானால் தீபிகா படுகோனை உயிரோடு புதைப்போம் என ராஜ்புத் அமைப்பின் தலைவர் தாகூர் அபிஷேக் சோம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சஞ்சய் லீலா பன்சாலியின் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் பத்மாவதி. இதில் ஹிந்தி நடிகை தீபிகா படுகோனே, சாஹித் கபூர் மற்றும் ரன்வீர் சிங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப்படம் வட மாநிலங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதில் ராஜஸ்தானின் சித்துார்கர் கோட்டையை ஆண்ட, ராணி பத்மினியைதவறாக சித்தரித்து இருப்பதாகவும், ராஜபுத்ர வம்ச பெண்களை இழிவுபடுத்தும் வகையில் படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
கொலைமிரட்டல்கள் விடுப்பு
இதைத்தொடர்ந்து ராஜபுத்ர வம்சத்தினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். நடிகை தீபிகா படுகோன் மற்றும் இயக்குனர் சஞ்சய் பன்சாலி ஆகியோருக்கு கொலைமிரட்டல்கள் விடுக்கப்பட்டன. அவர்களின் கொடும்பாவிகளும் எரிக்கப்பட்டன.
படத்தின் பெயர் மாற்றம்
இதைத்தொடர்ந்து மத்திய திரைப்பட தணிக்கை குழுவினரின் பரிந்துரைப்படி படத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டது. பத்மாவதி என்ற படத்தின் பெயரும், பத்மாவத் என மாற்றப்பட்டது.
4 மாநிலங்களில் தடை
படத்தை வெளியிட சென்சார்போர்டு சான்றிதழ் வழங்கியதை தொடர்ந்து வரும், 25ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த படத்தை வெளியிட குஜராத், ராஜஸ்தான், ஹரியானா, மத்திய பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டது.
முறையாகாது - சுப்ரீம்கோர்ட்
இந்த உத்தரவை எதிர்த்து படத் தயாரிப்பு நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. மனுவை விசாரித்த சுப்ரீம்கோர்ட் தணிக்கை குழுவினர் சான்றிதழ் வழங்கிய பிறகு தடை விதிப்பது முறையாகாது என்று கூறியது.
25ஆம் தேதி ரிலீஸ்
மேலும் படம் வெளியாவதற்கான தடையை நீக்கிய சுப்ரீம்கோர்ட் வேறு எந்த மாநிலமும் படத்திற்கு தடை விதிக்க கூடாது என்றும் உத்தரவிட்டது. இதனை எடுத்து பத்மாவத் திரைப்படம் வருகிற 25ம் தேதி திட்டமிட்டப்படி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
தீபிகாவை உயிருடன் புதைப்போம்
இந்நிலையில் பத்மாவத் படம் வெளியானால் படத்தின் இயக்குநர் சஞ்சய் பன்சாலி மற்றும் நடிகை தீபிகா படுகோனை உயிருடன் புதைப்போம் என்று ராஜ்புத்திரர்கள் அமைப்பின் தலைவர் தாகூர் அபிஷேக் சோம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.