மன்னிப்பு கேட்டு ஆளுநருக்கு நான் கடிதம் கொடுக்கவில்லை.. யாரையும் கொடுக்கவும் சொல்லலை: சஞ்சய் தத்
மும்பை: மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நடிகர் சஞ்சய் தத் தாம் மன்னிப்பு கேட்டோ தண்டனையை ரத்து செய்யக் கோரியோ மகாராஷ்டிரா ஆளுநருக்கு கடிதமே கொடுக்கவில்லை என்று மறுத்துள்ளார்.
மும்பையில் கடந்த 1993-ம் ஆண்டு நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் 257 பேர் உயிரிழந்தனர். 700-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்தின்போது சட்டவிரோதமாக ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்த குற்றத்துக்காக நடிகர் சஞ்சய் தத் கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவர் 1996-ம் ஆண்டு முதல் 18 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். இந்தநிலையில் 2013-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.
இதையடுத்து அவர் புனே எரவாடா சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் சஞ்சய் தத்துக்கு மன்னிப்பு வழங்கி, சிறைத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், ஜனாதிபதி மற்றும் மகாராஷ்டிரா மாநில ஆளுநருக்கு மனு அனுப்பினார்.
இந்நிலையில் சஞ்சய் தத்தின் சிறை தண்டனையை ரத்து செய்ய கோரிய முன்னாள் தலைமை நீதிபதியின் மனுவை மகாராஷ்டிரா ஆளுநர் வித்யாசகர் ராவ் நிராகரித்தார்.
ஆனால் மன்னிப்பு வழங்க கோரி ஆளுநரிடம் நான் மனுதாக்கல் செய்யவும் இல்லை, யாரையும் எனக்காக மனுதாக்கல் செய்யவும் நான் கேட்டுக் கொள்ளவும் இல்லை என்று நடிகர் சஞ்சய் தத் கூறிஉள்ளார். நடிகர் சஞ்சய் தத் சார்பாக அவருடைய வழக்கறிஞர் ஹிதிஸ் ஜெயின் மற்றும் சுபாஷ் ஜாதேவ் ஆகியோர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.