கோடிக்கணக்கில் சம்பாதித்த சஞ்சய் தத், சிறையில் செய்த வேலை இதுதான்
மும்பை: பிரபல நடிகர் சஞ்சய் தத் இன்று காலை எரவாடா சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். விடுதலை அடைந்த பினனர் பாதுகாப்பு காரணமாக அவர் தனி விமானம் மூலம் மும்பைக்கு சென்றார்.
இந்நிலையில் சிறையில் சஞ்சய் தத் செய்த வேலைகள் பற்றிய விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
கோடிக்கணக்கில் நடிகராக இருந்து சம்பாதித்த சஞ்சய் தத் சிறையில் என்ன வேலைகள் செய்தார், எப்படி நடந்து கொண்டார் போன்ற விவரங்களை எரவாடா சிறை அதிகாரி தெரிவித்திருக்கிறார்.
சஞ்சய் தத்
மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் கைதான சஞ்சய் தத் இன்று காலை நன்னடத்தை காரணமாக சிறையில் இருந்து விடுதலையானார். சிறையில் சஞ்சய் தத் செய்த வேலைகள் என்ன என்ற விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. இது குறித்து துணை தலைமை இன்ஸ்பெக்டர் ஸ்வாதி சாதே பின்வருமாறு தெரிவித்திருக்கிறார்.
பாதுகாப்பு காரணங்களால்
சஞ்சய் தத் காலை 5.30 மணியளவில் எழுந்து விடுவார். அதன் பின் அவர் காலை உடற்பயிற்சிகள், தேநீர், காலை உணவு ஆகியவற்றை செய்து முடிப்பார்.அவை முடிந்தவுடன் அவருக்கு ஒதுக்கப்பட்ட வேலைகளை செய்ய வேண்டும். சஞ்சய் தத் பாதுகாப்பு காரணங்களால் பிற கைதிளுடன் அனுமதிக்கப்படவில்லை.
காகிதப்பை
அதனால் அவர் தனது அறையிலேயே அமர்ந்து பிரம்பு நாற்காலிகள் மற்றும் காகிதப் பைகள் ஆகியவற்றை செய்யும் வேலைகளில் ஈடுபட்டு வந்தார். மேலும் பிற கைதிகளுக்கு உற்சாகமூட்டுவதற்காக இன்னர் சர்கியுட் வொய்.சி.பி வானொலியில் ரேடியோ ஜாக்கியாகவும் அவர் பணியாற்றினார்.
சீருடை அணிய மறுப்பு
இந்த சிறைக்கு வந்த ஆரம்ப நாட்களில் அவர் கைதிகளுக்கு உரிய சீருடையை அணிய மறுத்துவிட்டார். ஆனால் தொடர்ச்சியாக நாங்கள் கண்டிப்பான வார்த்தைகளில் கூறிய பின்னர் அவர் அணிய ஒப்புக் கொண்டார்" என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
23 வருடங்களுக்குப்பின்
56 வயதான சஞ்சய் தத் சிறையில் பணியாற்றியதற்காக ரூ 440 சம்பாதித்திருக்கிறார். சிறையில் இருந்து விடுதலையான பின் அவர் அளித்த பேட்டி ஒன்றில் "23 வருடங்களுக்குப்பின் இன்றுதான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
தந்தை இல்லை
இந்த தருணத்தைப் பார்க்க எனது தந்தை இல்லை அவர் இருந்திருந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பார். அவர் இல்லாதது எனக்கு வேதனை அளிக்கிறது.
இங்கேயே வாழ்ந்து
விடுதலையாவதை நினைத்து நேற்றிரவு முழுக்க நான் உறங்கவில்லை. இந்திய நாட்டுக் குடிமகனான நான் இங்கேயே வாழ்ந்து இங்கேயே உயிர் துறப்பேன்" என்று சஞ்சய் தத் தெரிவித்திருக்கிறார்.