விதிமுறைகளின் படியே சஞ்சய் தத் முன்கூட்டியே விடுதலை: மகராஷ்டிரா அரசு விளக்கம்
மும்பை: உரிய விதிமுறைகளின் படியே சஞ்சய் தத் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டார் என மகாராஷ்டிரா அரசு அம்மாநில உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
மும்பையில் கடந்த 1993-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 257 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்தின் போது, இந்தி நடிகர் சஞ்சய் தத் சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். அவருக்கு மும்பை தடா கோர்ட்டு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
கடந்த 2013-ம் ஆண்டு அவரது சிறை தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு 5 ஆண்டுகளாக குறைத்து தீர்ப்பு அளித்தது. அவர் ஏற்கனவே 1.5 ஆண்டுகள் சிறையில் இருந்த நிலையில், எஞ்சிய 3.5 ஆண்டு சிறை வாசத்துக்காக புனே எரவாடா சிறையில் அடைக்கப்பட்டார். இடைப்பட்ட காலத்தில் பலமுறை பரோலில் அவர் விடுவிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நன்னடத்தை அடிப்படையில் சஞ்சய் தத் தண்டனைக் காலம் முடிவதற்கு முன்னரே கடந்த ஆண்டு பிப்ரவரி 25ம் தேதி சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். அவரை விடுதலை செய்தது மகாராஷ்டிரா அரசு.
இது தொடர்பாக புனேவைச் சேர்ந்த பிரதீப் பலேகர் என்பவர் மும்பை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சாவந்த் மற்றும் சாதனா ஜாதவ் ஆகியோர் கொண்ட அமர்வு, சஞ்சய் தத்தை முன்கூட்டியே விடுதலை செய்தது குறித்து மகாராஷ்டிரா அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சஞ்சய் தத் விடுதலை குறித்து மகாராஷ்டிர அரசு அறிக்கை தாக்கல் செய்தது. அதில், உரிய விதிமுறைகளின்படியே சஞ்சய் தத் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதாகவும், அவருக்கு என சிறப்பு சலுகைகள் எதுவும் வழங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.