அரசு கோப்புகளை சோனியா பார்வையிடவில்லை: பிரதமர் அலுவலகம் மறுப்பு
டெல்லி: பிரதமர் அலுவலக கோப்புகளை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பார்வையிடவில்லை என்று பிரதமர் அலுவலகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங்கின் முன்னாள் ஊடக ஆலோசகராக கடந்த 2004ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரை இருந்தவர் சஞ்சய பாரு. அண்மையில் இவர் எழுதி வெளியாகியுள்ள புத்தகத்தில், பிரதமர் அலுவலகத்துக்கு வருவதற்கு முன்பே மத்திய அரசின் கோப்புகளை சோனியா காந்தி பார்வையிட்டதாகவும், அமைச்சரவை இலாகா ஒதுக்கீடு, அதிகாரிகள் இடமாற்றம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகளை சோனியா காந்தியே எடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது அரசியல் அரங்கில் கடும் சர்ச்சைகளை கிளப்பியிருந்தது. பிரதமர் மன்மோகன்சிங்கை தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து பிரதமர் அலுவலக செய்தித் தொடர்பாளர் பங்கஜ் பச்சௌரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் அலுவலக கோப்புகளை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பார்வையிட்டதாக பிரதமரின் ஊடகத்துறை முன்னாள் ஆலோசகர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இது அடிப்படை ஆதாரமற்றது, விஷமம் நிறைந்தது. பிரதமர் அலுவலக கோப்புகள் எதுவும் சோனியாவுக்கு காண்பிக்கப்படவில்லை. இதுதொடர்பான குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுக்கிறோம்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.