இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டத்தின் ஆலோசகர் யார் தெரியுமா?
இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டத்தை வழிநடத்தவுள்ளார் டோக்கியோவில் உள்ள டாடா நிறுவனத்தின் முன்னாள் இயக்குநராக இருந்த சஞ்சீவ் சின்ஹா.
மும்பை: குஜராத்தின் அகமதாபாத்- மும்பை இடையே இயக்கப்படவுள்ள அதிவேக ரயில் திட்டமான புல்லட் ரயில் திட்டத்தின் ஆலோசகராக டோக்கியோவில் உள்ள டாடா நிறுவனத்தின் முன்னாள் இயக்குநராக இருந்த சஞ்சீவ் சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார்.
அகமதாபாத், மும்பை இடையேயான புல்லட் ரயில் திட்டம் வரும் 14-ஆம் தேதி அடிக்கல் நாட்டப்படவுள்ளது. ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் நடைபெறும் இந்த திட்ட தொடக்க விழாவில் பிரதமர்கள் நரேந்திர மோடி, ஷின்ஷோ அபே உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
சுமார் ரூ.1.1 லட்சம் கோடி மதிப்பிலான இந்த திட்டம் வரும் 2022-இல் முடிவடையும். அகமதாபாத்- மும்பை இடையே உள்ள 508 கி.மீ. கொண்ட தூரத்தை இந்த புல்லட் ரயிலானது 2 மணி நேரத்தில் கடக்கும். அதிகபட்சமாக மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் இந்த ரயிலால் செல்ல முடியும். இந்த வழித்தடத்தின் இடையே உள்ள 12 ரயில் நிலையங்களில் சுமார் 165 வினாடிகள் ரயில் நின்று செல்லும்.
ஜப்பான் அரசு இந்த திட்டத்திற்கு ரூ. 88,000 கோடியை வழங்க உள்ளது. வட்டி வெறும் 0.1 சதவீதம்தான். கடன் பெற்ற 15 வருடங்களுக்கு பிறகு அதை திருப்பித்தரும் நடவடிக்கையை இந்தியா துவங்கினால் போதும்.
இந்த திட்டத்தின் ஆலோசகராக சஞ்சீவ் சின்ஹா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் டோக்கியோவில் உள்ள டாடா நிறுவனத்தின் முன்னாள் இயக்குநராக இருந்தவர். ராஜஸ்தான் மாநிலம், பர்மாரில் ஐஐடி படித்த முதல் நபராவார்.