சாரதா சிட் பண்ட் மோசடி வழக்கு குற்றப்பத்திரிகையில் ப.சிதம்பரம் மனைவி நளினி பெயரும் சேர்ப்பு!!
டெல்லி: நாட்டை உலுக்கிய சாரதா சிட் பண்ட் மோசடி வழக்கின் குற்றப்பத்திரிகையில் மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரத்தின் மனைவி நளினியின் பெயரும் இடம்பெற்றுள்ளது புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.
கொல்கத்தாவை மையமாக கொண்டு செயல்பட்டு வந்தது சாரதா சிட் பண்ட் நிறுவனம். பொதுமக்களிடம் பல்லாயிரம் கோடி ரூபாய் பணத்தை வசூலித்துவிட்டு அதை மக்களுக்கு திருப்பி தராமல் சுருட்டிக் கொண்டது இந்நிறுவனம் என்பது புகார்.
இப்படி பொதுமக்களிடம் சாரதா சிட் பண்ட் நிறுவனம் வசூலித்த பணத்தின் பெரும்பகுதியை அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் அபகரித்துக் கொண்டார்கள் என்பது இதன் நிறுவனர் சுதீப்தா சென்னின் குற்றச்சாட்டு. இவ்வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.
இவ்வழக்கில் மேற்கு வங்க ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களுக்கு தொடர்பிருப்பதாக கூறி பலர் கைது செய்யப்பட்டுள்ளர். இவ்வழக்கில் திங்கள்கிழமையன்று 6வது துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
அதில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி வழக்கறிஞர் நளினி சிதம்பரத்தின் பெயரும் இடம்பெற்றுள்ளது. ஆனால் நளினி சிதம்பரம், குற்றவாளியாகவோ அல்லது சாட்சியாகவோ சேர்க்கப்படவில்லை. இவ்வழக்கில் தொடர்புடைய காங்கிரஸ் மூத்த தலைவரான மனோரஞ்சனா சிங் சார்பில் சாரதா சிட் பண்ட் நிறுவனர் சுதீப்தா சென்னுடன் பேச்சுவார்த்தை நடத்தியவர் நளினி சிதம்பரம்.
டிவி சேனல் ஒன்றை மனோரஞ்சனா சிங் தொடங்க உள்ளதாகவும் அதற்காக சுதீப்தா சென் கடன் கொடுத்ததாகவும் கூறப்படும் விவகாரத்தில் மனோரஞ்சனா சிங்கின் வழக்கறிஞராக இருந்தவர் நளினி சிதம்பரம். இவருக்கான வழக்கறிஞர் கட்டணமாக ரூ1 கோடி வரை செலுத்தப்பட்டுள்ளது. ஆகையால் இந்த பணப் பரிவர்த்தனையில் நளினி சிதம்பரத்துக்கும் தொடர்பு உள்ளது என அந்த குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
இது ப.சிதம்பரம் குடும்பத்துக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.