மே. வங்கத்தில் முடிந்தால் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்திப் பாருங்கள்: மமதா சவால்
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் முடிந்தால் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்திப் பாருங்கள் என்று பாஜகவுக்கு அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி சவால்விடுத்துள்ளார்
பல்லாயிரம் கோடி ரூபாய் சாரதா சிட் பண்ட் மோசடி வழக்கில் திரிணாமுல் காங்கிரஸைச் சேர்ந்த எம்.பி. குணால் கோஷ் கைது செய்யப்பட்டார். அவரை திரிணாமுல் கட்சி சஸ்பென்ட் செய்தது. இதனைத் தொடர்ந்து மற்றொரு திரிணாமுல் எம்.பி. சிரின்ஜோய் போஸையும் சிபிஐ கைது செய்தது.
இதனைத் தொடர்ந்து மேற்கு வங்க அரசை கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று பாஜக வலியுறுத்தி வருகிறது. இதற்கு பதிலடி கொடுத்து மமதா பானர்ஜி கூறியுள்ளதாவது:
எங்களுடைய நடத்தையைப் பற்றி மேற்கு வங்க மக்களுக்கு நன்றாக தெரியும். பாரதிய ஜனதாவிடம் இருந்து நாங்கள் சான்றிதழ் பெற வேண்டிய தேவையில்லை.
டெல்லியில் மதச்சார்பற்ற கட்சிகளின் கூட்டத்தில் கலந்து கொண்டேன் என்பதற்காக மட்டுமே எங்கள் கட்சி எம்.பிக்களை பாஜக அரசு குறிவைக்கிறது. இதுபோன்ற கூட்டங்களில் ஆயிரமாயிரம் முறை கலந்து கொள்ளவே செய்வேன்.
குஜராத்தில் இருந்து மகாராஷ்டிரா.. டெல்லி என அனைத்து இடங்களிலும் பாஜக வன்முறையைத்தான் தூண்டிவிடுகிறது. அப்படி ஒரு வன்முறையை மேற்கு வங்கத்தில் தூண்டிவிட பாஜக விரும்பினால் அது நடக்காது.
மேற்கு வங்கத்தில் முடிந்தால் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்திப் பாருங்கள். எங்களைத் தாக்கினால் நாங்கள் பதிலடி கொடுப்போம்.. அனைத்துவித சவால்களையும் எதிர்கொள்ள தயாராகவே இருக்கிறோம்.
இவ்வாறு மமதா பானர்ஜி கூறியுள்ளார்.