சாரதா சிட் பண்ட் மோசடி: திரிணாமுல் எம்.பி. சிரின்ஜோய் போஸ் அதிரடியாக கைது!!
கொல்கத்தா: சாரதா சிட் பண்ட் மோசடி வழக்கில் புதிய திருப்பமாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா எம்.பி. சிரின்ஜோய் இன்று அதிரடியாக சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். மமதா பானர்ஜிக்கு மிகவும் நெருக்கமானவர் சிரின்ஜோய் போஸ் என்பதால் அவருக்கு இது பெரும் பின்னடைவு.
பல்லாயிரம் கோடி அளவுக்கு பொதுமக்கள் பணத்தை வசூலித்துவிட்டு ஏமாற்றியதாக தொடரப்பட்ட சாரதா சிட் பண்ட் மோசடி வழக்கில் ஏற்கனவே பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். திரிணாமுல் கட்சி எம்.பி குணால் கோஷும் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் திரிணாமுல் கட்சியில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜிக்கு மிக நெருக்கமான ராஜ்யசபா எம்.பி. சிரின்ஜோய் போஸுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. இதனைத் தொடர்ந்து இன்று சிபிஐ முன்பு ஆஜராக போஸிடம் 6 மணிநேரம் கிடுக்கிடுப்பிடி விசாரணை நடைபெற்றது.
அப்போது சாரதா சிட் பண்ட் நிறுவன உரிமையாளர் சுதீப்தோ சென்னை மிரட்டி மாதந்தோறும் ரூ60 லட்சம் பணம் வாங்கியது குறித்து துருவித் துருவி சிபிஐ அதிகாரிகள் கேள்வி எழுப்பினர். மேலும் 2010ஆம் ஆண்டு சாரதா குழுமம் மற்றும் சென் ஊடக நிறுவனம் தொடங்குவதற்கு சிரின்ஜோய் போஸ் உதவியதாகவும் சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.