நிதி அமைச்சகம், செபி அதிகாரிகளை லஞ்சம் கொடுத்து வளைத்த ஹவாலா கும்பல்- பகீர் தகவல்கள்
டெல்லி: நாட்டை உலுக்கிய பல்லாயிரம் கோடி சாரதா சிட் பண்ட் மோசடியில் இந்திய பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான Securities and Exchange Board of India (SEBI- செபி) மற்றும் நிதி அமைச்சக உயர் அதிகாரிகள் பலருக்கும் தொடர்பிருக்கிறது என்ற அதிர வைக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. செபி மற்றும் நிதி அமைச்சக அதிகாரிகளுக்கு பெருமளவு லஞ்சம் கொடுத்து சாராதா நிறுவனம் மற்றும் ஹவாலா கும்பல் வளைத்திருப்பதும் அம்பலமாகியுள்ளது.
14 மாநிலங்களில் 27 லட்சம் முதலீட்டாளர்கள், மேற்கு வங்கத்தின் சாரதா சிட் பண்ட் நிறுவனத்தில் ரூ2,500 கோடி முதலீடு செய்தனர். ஆனால் இத்தனை ஆயிரம் கோடி பணமும் பொதுமக்களுக்கு திருப்பித் தரப்படாமல் பல ஊழல் பெருச்சாளிகளால் விழுங்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவை உலுக்கும் இந்த சாரதா சிட் பண்ட் மோசடி தொடர்பான விசாரணை அறிக்கை ஒன் இந்தியா இணையதளத்துக்கு கிடைத்துள்ளது. அதில் இடம்பெற்றுள்ள பரபரப்பு தகவல்கள்:
- இந்த விசாரணை அறிக்கை மொத்தம் 500க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்டது.
- சாரதா சிட் பண்ட் மோசடியில் பல அரசியல் பிரபலங்களுக்கு தொடர்பிருப்பது தெளிவாக தெரிகிறது.
- சிபிஐ தீவிரமான விசாரணை நடத்தினால் அரசியல் தலைவர்களின் தொடர்புகளையும் பண பரிவர்த்தனைகளையும் வெளிக்கொண்டு வர முடியும்.
- மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த தற்போதைய அமைச்சர் ஒருவரை நிச்சயம் சிபிஐ விசாரணைக்குட்படுத்தியே ஆக வேண்டும். அவருக்கு இதில் முழுத் தொடர்பு இருக்கிறது.
- சாரதா நிறுவனத்தின் பெரும் பங்கு பணம் பல வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இப்படி வெளிநாடுகளுக்கு பெரும்பாலும் "ஹவாலா" முறையில்தான் பணம் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.
- அமெரிக்கா மற்றும் மேற்கு ஆசியாவுக்கு மட்டும் ரூ120 கோடி பணம் ஹவாலா முறையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
- பெரும்பாலான ஹவாலா பரிவர்த்தனைகள் தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்புடையவர்களாலேயே மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
- வங்கதேச தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருப்பதாக உளவுத்துறை சுட்டிக்காட்டும் எம்.பி. ஒருவர் சாரதா சிட் பண்ட் மூலம் திரட்டப்பட்ட பணத்தை வெளிநாட்டுக்கு கொண்டு செல்வதில் மிக உதவியாக இருந்திருக்கிறார்.
- அதேபோல் சந்தேகத்துக்குரிய ரூ50 கோடி பணப் பரிவர்த்தனையில் 6 'செபி' அதிகாரிகளும் விசாரணை வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
- சாரதா நிறுவனத்தின் உரிமையாளர் சுதீப்தோ சென் பல்வேறு நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்து நியாயமான 'செபி' விதிகளுக்கு உட்பட்ட கணக்குகளாக காட்ட முயற்சித்திருக்கிறார்.
- இப்படி பல நிறுவனங்களுக்கு சாரதா நிறுவனப் பணத்தை மாற்றியது தொடர்பாக தேபாப்ரதா சர்க்கார் மறும் சந்திர் அகர்வால் என்ற இரு தொழிலதிபர்களை சிபிஐ விசாரித்துள்ளது.
- இந்த இருவரைத் தவிர ராஜஸ்தானைச் சேர்ந்த ஒருவரும் இதுபோன்ற சாதுரிய பணப் பரிமாற்றத்துக்கு உதவியாக இருந்திருக்கிறார்.
- காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மதாங் சிங், தமது பாசிட்டிவ் டிவி நிறுவனப் பங்குகளை சாரதா நிறுவன சென்னுக்கு விற்பனை செய்ததாக கூறியிருக்கிறார்.
- ஆனால் சிபிஐ அதிகாரிகளோ, இந்த பாசிட்டிவ் டிவி பங்கு விற்பனையில் பிரச்சனைகள் இருந்த போதும் மதாங் சிங்கே சென்னிடம் இருந்து பங்குகளை திரும்பவும் வாங்கியிருப்பதை சிபிஐ அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
- சென்னிடம் சிபிஐ விசாரணை நடத்திய போது மதாங் சிங்குக்கு பாசிட்டிவ் டிவி பங்குகளை திரும்பவும் விற்கவில்லை என்று கூறியிருக்கிறார். இது செபியை ஏமாற்றுவதற்கான ஒரு பணப்பரிவர்த்தனை என சிபிஐ கருதுகிறது.
- மும்பையில் வசிக்கும் ராஜஸ்தான் தொழிலதிபர் ஒருவர் இந்த வழக்கில் மிக மிக முக்கியமானவராக சிபிஐ கருதுகிறது. இவரை சாரதா நிறுவன உரிமையாளர் ஜாஸ் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
- இந்த ஜாஸுக்கும் செபி அதிகாரிகளுக்கும் மிக மிக நெருக்கமான தொடர்பிருந்துள்ளது. இந்த அதிகாரிகளைக் கைக்குள் போட்டுக் கொண்டு ஜாஸ் மூலம் பொதுமக்களிடம் வசூலித்த பணம் பல நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டிருக்கிறது.
- இந்த விவகாரத்தில் செபி தலையிடாதவாறு பார்த்துக் கொள்ள 3 ஆண்டுகளில் சுமார் ரூ50 கோடி அளவுக்கு ஜாஸுக்கு சாரதா நிறுவன உரிமையாளர் சென் கொடுத்திருக்கிறார்.
- ஜாஸ் மற்றும் சந்தீப் அகர்வால் இருவரும் செபியின் உயர் அதிகாரிகளை கைக்குள் போட்டுக் கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்திருக்கின்றனர்.
- 2010ஆம் ஆண்டு சிபிஐ இந்த விசாரணையை தொடங்கிய போது மத்திய நிதி அமைச்சகத்தைச் சேர்ந்த பலரது பெயரும் அடிபட்டதாக கூறுகிறது.
- சாரதா நிறுவன உரிமையாளர் சென்னிடம் சிபிஐ விசாரித்த போது, நிதி அமைச்சகத்தைச் சேர்ந்த பலருக்கு இதில் நேரடித் தொடர்பு இருப்பதை உறுதிப்படுத்தியும் இருக்கிறார்.
- இதனைத் தொடர்ந்து சென்னுக்கு மிக நெருக்கமான தொழிலதிபர்களுக்கும் நிதி அமைச்சக அதிகாரிகளுக்குமான தொடர்பு குறித்து சிபிஐ துருவித் துருவி விசாரித்து வருகிறது.
- சாரதா சிட் பண்ட் ஊழலை மூடி மறைக்க இடைத்தரகர்கள் மட்டுமின்றி செபியில் உயர் அதிகாரி ஒருவர் லஞ்சம் பெற்றதும் தெரியவந்துள்ளது.
- சாரதா சிட் பண்ட் நிறுவனத்தின் பெரும்பங்கு பணம் ஊடக நிறுவனங்களிலேயே முதலீடும் செய்யப்பட்டிருக்கிறது.
- அஸ்ஸாமில் சுற்றுலா நிறுவனங்கள், மேற்கு வங்கத்தில் விளையாட்டு கிளப்புகள் ஆகியவற்றிலும் இந்த பணம் முதலீடாக்கப்பட்டுள்ளது.
- 2010ம் ஆண்டில்தான் சாரதா நிறுவனத்தின் பணம் அனைத்தும் மேற்கு வங்கம், அஸ்ஸாம், ஒடிஷா மற்றும் மும்பையில் பல்வேறு நிறுவனங்களுக்குள் முடக்கி வைக்கப்பட்து.
- சாரதா நிறுவனத்திடம் பணத்தைப் பெற்று நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டிருப்பவை அனைத்தும் சட்ட ரீதியாக செய்யப்பட்டது போலவே காட்டப்பட்டுள்ளது.
- ஆனால் பின்னர் இந்த முதலீட்டுப் பணம் அப்படியே சாரதா நிறுவன அக்கவுண்ட்டுகளுக்குப் போய் மாயமாய் மறைந்திருக்கிறது என்பதை சிபிஐ aகண்டுபிடித்துள்ளது.
- இப்படி ரூ1200 கோடி சாரதா நிதி நிறுவனத்துக்கு திரும்ப வந்து, ஹவாலா'வாலா'க்கள் மூலம் வெளிநாட்டில் கொண்டு போய் பதுக்கப்பட்டும் இருக்கிறது.