6.5 ரிக்டர் நிலநடுக்கத்தை தாங்கும்... 'இரும்பு மனிதர்' சிலையில் வேறு என்ன சிறப்பு?
Recommended Video
அஹமதாபாத் : குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேலின் சிலை 6.5 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தையும் தாங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் இரும்பு மனிதருக்கு அவரின் அடைமொழிக்கு ஏற்ப மிகவும் ஸ்திரமான சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் முதலாவது உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேலுக்கு குஜராத் மாநிலத்தில் மிகப்பிரமாண்டமான சிலை அமைக்கப்பட்டு உள்ளது. நர்மதா மாவட்டம் சர்தார் சரோவர் அணை அருகே சாது பேட் என்ற குட்டித்தீவில் இந்த சிலை நிறுவப்பட்டுள்ளது. சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளான இன்று இந்த சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்.
உலகிலேயே மிக உயரமான சிலையாக அமைக்கப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலையின் சிறப்பு அம்சங்கள் என்ன? :
உலகிலேயே மிக உயரமானது.. குஜராத்தில் இன்று திறக்கப்படுகிறது சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை!
1. சர்தார் வல்லபாய் படேல், நாட்டை ஒன்றுபடுத்தியதை குறிப்பிடும் வகையில் இந்த சிலையானது 'ஒற்றுமை சிலை' என்று அழைக்கப்படுகிறது. இதன் உயரம் 182 மீட்டர். அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையை விட 2 மடங்கு உயரம் கொண்டது.
2. ரூ. 1989 கோடி செலவில் படேல் சிலை உருவாக்கப்பட்டுள்ளது. 1 லட்சத்து 40 ஆயிரம் கியூபிக் மீட்டர் கான்கிரிட்டீல் 18, 500 டன் இரும்புக் கம்பிகளை பயன்படுத்தி உறுதியானதாக கட்டப்பட்டுள்ளது. 2 ஆயிரம் டன் வெண்கல ஷீட்டுகளால் சிலை பூசப்பட்டு 33 மாதங்களில் 3 ஆயிரம் பணியாளர்களைக் கொண்டு கட்டப்பட்ட சிலை என்ற சாதனையையும் அடைந்துள்ளது.
3. 2010ம் ஆண்டில் குஜராத் முதலமைச்சராக இருந்த தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி இந்த சிலை அமைக்கப்படும் என்று அறிவித்தார்.இதற்கான அடிக்கல் 2013ல் நடப்பட்டது.
4. நொய்டாவைச் சேர்ந்த பத்ம பூஷன் விருது பெற்ற சிற்பி ராம் வி. சூட்டர் இந்த சிலையை வடிவமைத்துள்ளார். இவர் தனது கலைப்பயணத்தில் 40 ஆண்டுகளில் 50 நினைவுச் சின்னங்களை வடிவமைத்துள்ளார். படேல் சிலையில் சிறப்பு கவனம் செலுத்தி அமைத்துள்ளதாகவும், படேலின் 2 ஆயிரம் புகைப்படங்களையும் வைத்து அவரின் முக அமைப்புகளை உருவாக்கியுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் படேலை சந்தித்தவர்கள் மற்றும் வரலாற்று ஆர்வலர்களை கலந்து ஆலோசித்து சிலையை உருவாக்கியுள்ளதாகவும், சர்தார் வல்லபாய் படேலின் சிலை சர்தார் சரோவர் அணையை நோக்கி நடைபோடுவது போல சிலை அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
5. உலகம் முழுவதிலும் 139 சிலைகள் 30 மீட்டர் உயரத்தில் உள்ளன. இவற்றில் 42% சிலைகள் சீனா அல்லது இந்தியாவில் உள்ளது. சீனாவில் 34 உயரமான சிலைகளும் இந்தியாவில் 25 சிலைகளும் உள்ளன. இவற்றின் உயரம் 30 மீட்டர்
6. ஒற்றுமை சிலை அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவியின் சிலையை விட இரண்டு மடங்கு உயரமானது. சர்தார் வல்லபாய் படேலின் சிலை தற்போது உலகிலுள்ள உயரமான சிலைகளின் பட்டியலில் முதல் இடம் பெற்றுள்ளது. சீனாவில் கட்டப்பட்டுள்ள 128 மீட்டர் உயர புத்தர் சிலையை விட படேலின் சிலை உயரமானது.
7. உலகின் மிக உயரமான சிலை என்பதோடு சர்தார் வல்லபாய் படேலின் சிலை நீர் நிலைக்கு நடுவே கட்டப்பட்டிருந்தாலும் இயற்கை பேரிடர்களை சமாளித்து நிற்பதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச நிலநடுக்கமாக 6.5 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டாலும் சேதம் ஏற்படாத வகையில் படேல் சிலை நிறுவப்பட்டுள்ளது.
8.பிரதமர் சிலையை திறந்து வைத்த பின்னர் இந்திய விமானப்படைக்கு சொந்தமான 3 விமானங்கள் வானில் பறந்து சென்று, தேசிய கொடியில் உள்ள 3 வண்ணங்களில் பொடிகளை தூவி, வானில் தேசிய கொடியை உருவாக்க உள்ளது.